Saturday, 19 August 2017

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!!

குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது.இது குறித்த கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன் நண்பர்களே...அதிலிருந்து சில முக்கியத் தகவல்கள் உங்களுக்காக....
குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான்.
கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் குடம்புளி 2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது. தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது.
தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை.
மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும். அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் காரணமாக பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதை கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம். நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது.
குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை. மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது.
குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை.
அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம்.
இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது என்கிறது அந்தக் கட்டுரை.

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்

கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.
தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.
நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.
பண்ணை அமைக்கும் முறைகள்:
நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.
பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.
காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:
குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.
ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.
குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.
ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?* Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

பூச்சிகளை கவனிங்க – பகுதி 3*

*பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?*

நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை என்பதை மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடுகள், இனப்பெருக்கம், வகை பிரித்து கண்டறிவது எப்படி என்பன போன்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக இந்த பதிவு அமைகிறது!
Image may contain: text
*பயிரை தாக்கும் பூச்சிகள் (Agricultural pests)*
நமது புரிதலுக்காக பயிரை தாக்கும் பூச்சிகளை, "தீமை செய்யும் பூச்சிகள்" என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் உணவு பழக்கம், உடல் அமைப்பு, இனப்பெருக்கம் செய்யும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் பல வகைகளாக நாம் அடையாளப் படுத்தலாம்.
*1, இலையைத் சாப்பிடும் பூச்சிகள்*

இதில் புழுக்களும், பூச்சிகளும் அடங்கும். இதன் வாய் வெட்டும் தன்மையுடன் இருக்கும். உதாரணம் வெட்டுகிளி, பச்சைக் காய்புழுக்கள், ஒரு சில தரைவண்டுகள், காண்டாமிருக வண்டுகள்.
*2, சாறு உறிஞ்சும் பூச்சிகள்*
அசுவினி, வெள்ளை ஈ, மாவுபூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன், செதில்பூச்சி போன்றவை சாறு உறிஞ்சும் பூச்சிகளாகும். இத்தகைய பூச்சிகளுக்கு இரண்டு குழல்கள் இருக்கும், ஒன்று எச்சிலை உமிழ்வதற்கும், மற்றொன்று சாறை உறிஞ்சுவதற்கும் பயன்படுகிறது.
*3, தண்டு மற்றும் வேர்பகுதியை தாக்கும் புழுக்கள்*
கரும்பு இடைக்கணுப்புழு, நெல்லின் குருத்துபுழு, பருத்தியின் காய்புழு போன்றவை இந்த ரகத்தில் சேர்ந்தவை.
*அசுவினி*
அசுவினிப்பூச்சிகள் சாறு உறுஞ்சும் வகையைச் சேர்ந்தவை. வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேல் படர்ந்திருக்கும், வகைக்கு ஏற்ப நிறத்தில் சிறிய மாற்றமிருக்கும் ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். பொதுவாக இவைகளுக்கு இறக்கை கிடையாது. எனினும் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அவை நினைத்தால் இறக்கை முளைக்கும்.
*அசுவினி இனப்பெருக்கம்*
இப்பூச்சிகள் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்பவை. அசுவினியின் வாழ்நாள் 21 நாட்கள், பெண் பூச்சிகள் பிறந்து 7 நாள் ஆன உடனே ஆண் துணை இன்றியே குட்டி போடத் துவங்கிவிடும். ஒரு நாளில் 40 குஞ்சுகளைப் போடும். பிறந்த குஞ்சுகளும் 7வது நாளில் இருந்து இனப்பெருக்கம் செய்யும் திறனை அடைந்துவிடும். 7வது நாளில் தொடங்கி இறக்கும் வரை குஞ்சுகள் போடும், இவ்வாறு பூச்சிகளின் இனப்பெருக்கம் 40 மடங்காக பெருகுவதால் சில நாட்களிலேயே பூச்சிகளின் எண்ணிக்கை கோடியை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இயற்கையில் இவ்விதம் நடப்பதில்லை. அசுவினியின் அபரிமிதமான இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையே பொறிவண்டு போன்ற இறைவிழுங்கிப் பூச்சிகளை உருவாக்கியுள்ளது. பொறிவண்டுகள் அசுவினியை உண்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மழை பொழியும் போதும் இந்த பூச்சி பெரிதளவில் கட்டுப்படுத்தபடுகிறது.
வேர்பகுதியை தாக்கும் அசுவினிகளும் உண்டு. உதாரணமாக வாழையில் அசுவினிகள் வேர்க் கிழங்கில் காணப்படுகிறது.
*அசுவினி வெளியேற்றும் சர்க்கரை திரவம்*
அசுவினிகள் சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றன, இவை கருப்பு எறும்புகளுக்கு உணவாகிறது. எனவே அசுவினியை சுற்றிச்சுற்றி எறும்புகள் மேய்ந்து கொண்டு இருக்கும். எனவே அசுவினியை பொறிவண்டுகள் தாக்கினால், பொறிவண்டை எறும்புகள் தாக்கும். ஆனால் இத்தகைய தாக்குதலை எல்லா சூழ்நிலைகளிலும் காண இயலாது.
*நெல்பயிரை தாக்கும் பூச்சிகள்*
ஆணைக்கொம்பன் ஈ, தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி), இலைப்பேன், பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு, கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) மற்றும் நெல் ஸ்கிப்பர்
*ஆணைக்கொம்பன் ஈ*
முட்டையில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் நெல் பயிர்களின் தூர்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது. அந்த தூர் வெங்காயக் குறுத்து போன்று உள்ளே ஓட்டையுடன் காணப்படும். குறுத்து ஊதுபத்தி போல் உருண்டையாக மாறிவிடும். இதில் இருந்து கதிர்கள் வெளிவராது.
*தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி)*
அது அந்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. அந்துப்பூச்சிகள் வெண்மை அல்லது இள மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் இருக்கும். நாற்றங்காலில் அல்லது நாற்று நட்டு சில நாட்களில் இலைகளின் நுனியில் முடையிடுகின்றன. முட்டையில் இருந்து வரும் புழுக்கள் குறுத்தை அடைந்து இளங்குறுத்துக்களை உண்கின்றன.
*கட்டுப்படுத்தும் முறை*
ட்ரைகோகிராமா ஒட்டுண்ணிகள் இப்புழுக்களை கட்டுப்படுத்தக் கூடியவை. பயிர்களின் இலைகளில் காணப்படும் முட்டைக் குவியல் உள்ள இலைகளை களைதல், நாற்றங்காலில் 15வது நாளில் ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசல் அடிப்பது பாதுகாப்பானது. குறுத்து புழுவினால் நன்மையும் உண்டு! குறுத்துப்புழுவினால் தாக்கப்பட்ட பயிர் அதிகமாக தூர் வெடிக்கும்.
'புகையான்'
புகையான் என்பது தத்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. பயிர்கள் நெருக்கமாக இருக்கும் போது இதன் தாக்குதல் அதிகம் இருக்கும். பயிர்கள் வட்ட வட்டமாக கருகுவது இதன் அறிகுறியாகும்.
*நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய புரிதல்*
விலங்குகளில் எப்படி சிங்கம் ஒரு மானை அடித்து உண்கிறதோ அவ்வாறே சில அசைவப் பூச்சிகள் மற்ற பூச்சிகளை பிடித்து உண்கிறது. இப்படிப்பட்ட அசைவப்பூச்சிகள் விவசாயிகளுக்கு நன்பனாக செயல்படுவதால் அவை நன்மை செய்யும் பூச்சிகள் என்று கூறப்படுகிறது. இவை பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளை உண்கின்றன.
இறையை நேரிடியாக கொன்று உண்டால் அவை இறைவிழுங்கிகள் எனப்படுகிறது. ஒரு சில பூச்சிகள் மற்ற பூச்சிகளின் புழுக்கள் மீது முட்டையிட்டு அவற்றை அழிக்கிறது, இப்படிப்பட்டவை ஒட்டுண்ணிகள் எனப்படுகிறது.
*இறைவிழுங்கிகள்*
இவற்றின் வாழ்நாள் 30 முதல் 50 நாட்கள் வரை இருக்கும். இவை நேரடியாக எதிரிப்பூச்சியை பிடித்து உண்ணும், அதற்கேற்ப பலமான வாய், இறக்கை போன்றவற்றை பெற்றிருக்கும், சுறுசுறுப்பானவை, அதனுடைய உணவுப்பூச்சிகளை விட பெரிய வடிவில் இருக்கும். பலவகையான பூச்சிகளை பிடித்து உண்ணும், அதிகபட்சமாக 50 வகையான பூச்சிகளை பிடித்து உண்ணக்கூடியவை. அதன் உணவு பூச்சியின் முட்டை, புழு, பூச்சி என எல்லா பருவத்திலும் தாக்கி உண்ணும்.
*பொறிவண்டு*
அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டுகளை சாதாரணமாகக் காணமுடியும்.
பொறிவண்டுகள் அரைத் துவரம் பரும்பு அளவில் இருக்கும். இதன் முதுகுப்புறம் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், சில வகைகளில் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும்.
அசுவினிப் பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே தாய் பொறிவண்டு முட்டையை இடுகிறது.
பொறிவண்டின் இளம் புழு பருவத்தில் அசுவினியின் சாற்றை உறிஞ்சி குடிக்கிறது, சற்று வளர்ந்த புழு அசுவினியை பிடித்துத் திண்கிறது. இளம் புழுவில் இருந்து பொறிவண்டாக மாறும் வரை 300 அசுவினியை பிடித்து திண்கிறது. இதனால் அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்னை பெருமளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
*எச்சரிக்கை போலி பொறி வண்டுகளும் உண்டு*
போலி பொறிவண்டுகள் தீமை செய்யும் வகையைச் சார்ந்தது. இதன் லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பொறிவண்டுகள் இரண்டும் இலைகளை தின்னக்கூடியவை.
நன்மை செய்யக் கூடிய பொறிவண்டின் முதுகில் இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 10-12 வரை இருக்கும். புள்ளிகளின் எண்ணிக்கை 12க்கு மேல் இருந்தால் அது போலி பொறிவண்டு. சில நேரங்களில் போலி பொறிவண்டுகளின் முதுகின் மீது நுண்ணிய இழைகள் இருக்கும்.
*அசுவினி ஈ*
இந்த ஈ புழு பருவமாக இருக்கும் போது அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகளை துளைத்து அதன் சாற்றை குடிக்கிறது.
*செங்குளவி*
பச்சை காய்புழுக்களை குளவிகள் பிடித்து வந்து அதன் கூட்டுக்குள் போட்டு அந்த புழுவின் மீது தனது முட்டைகளை இட்டுவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு பச்சைகாய்புழுதான் அதற்கு பிரியாணி. இந்த புழுக்கள் கூட்டிலேயே முழுவளர்ச்சி அடைந்து வளர்ந்த குளவியாக வெளிவருகிறது.
*நீள் கொம்பு வெட்டுக்கிளி*
இந்த வெட்டுக்கிளியின் தோற்றம் மற்ற வெட்டுகிளியை போன்று முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையாக இருக்கும், அதன் உணர் இழை வெட்டுக்கிளியின் உடல் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். இது காய்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் புழுக்களை திண்ணக்கூடியது
*தொழுவெட்டுக்கிளி*
இந்த பூச்சியை பெருமாள் பூச்சி அல்லது கும்பிடு பூச்சி என்றும் அழைக்கின்றனர், இந்த பூச்சியை இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் பார்ப்பது அரிது, இயற்கை விவசாயம் செய்யும் நிலங்களில் மட்டுமே பார்க்க இயலும்.
*தட்டான் (தும்பி)*
தும்பியும் பூச்சிகளை தின்றே உயிர் வாழ்கிறது, தண்ணீர் உள்ள நெல்வயலில் தும்பிகள் முட்டையிட்டுகின்றன, பின் அதில் வளரும் இளம் புழுக்கள், தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்களை உண்டு வளர்ந்து கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும். வளர்ந்த தும்பிகள் பயிரில் உள்ள பூச்சிகளை பிடித்து திண்ணும்.
*கொலைகார நாவாய் பூச்சி*
நாவாய் பூச்சிகளில் நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என்று இரண்டும் உண்டு. கொலைகார நாவாய் பூச்சிகள் புழுக்கள் மற்றும் முட்டைகளை உண்டு வாழக்கூடியவை. காய்புழுக்களை கட்டுப்படுத்துவதில் இந்த வகை நாவாய்பூச்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பூச்சியை இன்பெருக்கம் செய்து வயலில் விடும் தொழில் நுட்பத்தை வேளாண் பல்கலைக் கழகங்களை அனுகி தெரிந்து கொள்ள முடியும்.
*தரைவண்டுகள்*
தரைவண்டுகளில் சில வகைகள் நன்மை செய்யக்கூடியவையாகவும், சில வகைகள் தீமை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக ஒபியோனியா என்ற தரை வண்டு புகையான், தத்துப்பூச்சிகள், இலை மடக்குப்புழு போன்ற நெற் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த கூடியது.
*சிலந்திகள்*
சிலந்திகள் வயல்வெளிகள், தோட்டங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு சில சிலந்திகள் வலை கட்டாமலேயே நேரடியாக பூச்சிகளை பிடித்துத் திண்ணக்கூடியவை.
நன்மை செய்யும் பூச்சிகளில் சிலந்திகள் மிக முக்கியமானவை சிலந்திகள். இவை பூச்சி இனங்களை சார்ந்தது அல்ல என்பதை அவைகளுக்கு உள்ள எட்டு கால்களே உறுதிப்படுத்திவிடும். பூச்சிகளின் சில பன்புகளை ஒத்திருப்பதாலும் பூச்சிகளின் வாழ்விடத்திலேயே சேர்ந்து வாழ்வதாலும் சிலந்திகள் ஒரு பூச்சியைப் போன்றே கருதப்படுகிறது.
இவை ஆயிரக்கணக்கில் முட்டையிடக்கூடியது எனினும் முட்டையில் இருந்து வெளிவரும் குச்சுகளில் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் மட்டுமே பெரிய சிலந்தியாக வளர்கிறது. மேலும் இவை தன் இனத்தையே உண்ணக்கூடியவை. (Cannibalism)
*சிலந்திகளைப் பற்றிய ஒரு தகவல்*
பயிற்சிக்கு தேவையான ஆயத்தப்பணிகளை செய்வதற்காக பயிற்சி நடப்பதற்கு ஒரு மாதம் முன்பே கதிராமங்களத்திற்கு சென்றிருந்தோம், அப்போது நெல்வயல்களை பார்வையிட்டபோது, நன்கு வளர்ந்த பயிரின் நுனியெல்லாம் கொத்து கொத்தாக வளைந்து சாய்ந்திருந்தது, அதைப் பார்த்ததும் அவை ஏதோ பூச்சிகளால் தாக்கப்பட்டுள்ளது போல தோன்றியது, ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது பயிரின் நுனியை மடித்து ஆர்ப் சிலந்திகள் (Orb spiders) வலை கட்டியிருந்ததை காண முடிந்தது.
ஒரு வலையில் ஒரு சிலந்தியும் நான்கைந்து முட்டைக்கூடுகளும் காணமுடிந்தது. 10 சதுர மீட்டருக்குள் 20 சிலந்தி என்ற எண்ணிக்கையில் இருந்தது. பொதுவாக சீமைக்கருவேல மரங்களில் காணப்படும் இந்த வகை சிலந்திகளை வயலில் கண்டது அரிதானது. மேலும் இவ்வளவு சிலந்திகள் இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் காணஇயலாது. இயற்கை விவசாயம் செய்யும் பண்ணை என்பதால் காணமுடிகிறது, மேலும் மற்ற சில இடங்களில் நீள் தாடை சிலந்திகளையும் காணமுடிந்தது.
பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...

உலகெல்லாம் புகழ்பரப்பும் முருங்கை! Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

உலகெல்லாம் புகழ்பரப்பும் முருங்கை!

அமெரிக்கா இதனையும் உரிமை கேட்கிறது.
நாட்டு மருந்துகளுக்கு புகழ் பெற்ற சீனாவில்கூட தற்போது முற்றிய முருங்கைக்காயின் காய்ந்த விதைதான் இனிப்பு நோயினைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மலேசியா, சிங்கப்பூர்களில் மலாய்க்காரர்கள், சீனர்கள் ஒரு கிலோ முருங்கை விதை ரூ1500க்கு மேல் விலை கொடுத்து வாங்கி, டீ போல் கசாயம் செய்து குடிக்கிறார்கள். தற்போது விட்டமின் குப்பிகளை விற்கும் அனைத்து புகழ்பெற்ற நிறுவனங்களுமே, முருங்கை இலையினைக் காயவைத்து பொடி செய்து கேப்சூல் வழி விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாறிக்கிறார்கள். எனது ஆந்திர நண்பர் ஒருவர் முருங்கை இலைகளைச் சேகரித்து பொடி செய்து லண்டனுக்கு அனுப்பும் தொழிலினைச் செய்து
பொருளீட்டி வருகிறார்.
நெல்லிக்காய் பொடி, பிரண்டை பொடிகளைப் போல் இப்போது முருங்கைப் பொடியும் பிராண்ட் பெயருடன் இந்தியாவிற்கே வந்து ஒரு குப்பி 550 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
நாமோ இன்னும் இதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் எனது வீட்டில், என் மனைவியிடம் ஒரு கட்டளையாகவே (கெஞ்சித்தான்) சொல்லி, வாரமொருமுறை முருங்கைக்கீரை சமைக்கச்சொல்லி பிள்ளைகளுக்குக் கொடுத்து வருகிறோம். ஏதோ முருங்கைக் காயின் ருசியினால் மட்டும் அவ்வப்போது அதன் மருத்துவ குணம் அறியாமல் சாப்பிட்டு வருவது சிறந்ததாய் இருக்கிறது.
முருங்கை இலை, காய், பூ, விதை என இம்மரத்தின் பிசான்கூட அருமருந்தாகும். இதன் சாற்றினை இப்போது பல்வேறு குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே, கண்முன் இருக்கின்ற நல்லவைகளை விட்டுவிட்டு மருத்துவத்தில் தரப்படும் இதன் சாற்றினை விலை கொடுத்து வாங்காதீர்கள்.
நமக்கு நம் முன்னோர் விட்டுச்சென்ற அருமருந்து உணவுகளில், வரும்முன் காக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று!
படித்தோம், பகிர்ந்தோம் என்றில்லாமல் நீங்களும் உங்கள் இல்லங்களில் கட்டளையிட்டாவது (!!!) முருங்கைக் கீரையினை உணவில் சேர்க்கும் முறையினைப் பின்பற்றுங்கள்.

ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் . Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் .

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன .
அவை சாணம் மற்றும் கோமியம் .
நாம் செய்ய வேண்டியது …
Image may contain: one or more people and people standing
1) சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்து கொடுப்பது ( சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும் )
2) சாணமும் கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்குமாறு செய்யவேண்டும்

3)கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து பிரித்து எடுத்து கொண்டு பஞ்ச காவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம் .
4) சாணத்தை கோபர் gas தயாரிக்க பயன்படுத்தவும் . அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும் .
5) கோபர் gas தயாரித்த பின் , மிச்சம் உள்ள sludge ஐ மண்புழு உரம் தயாரிக்க பயன் படுத்தவும் .
6) கோபர் gas தயாரிக்க பயன்படுத்தப்படும் tank இல் பழைய காப்பர் wire மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும் . sludge ஐ மண்புழு உறதிர்க்காக எடுத்த வுடன் மீதமிருக்கும் slurry யை தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு அனுப்பவும் . ( மினரல் குறைபாட்டால் தான் மாடுகள் சினைபிடிப்பில் கோளாறுகள் வருகின்றன , அதை இப்படி செய்வதன் மூலம் தவிர்க்கலாம் ).
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் , பஞ்ச காவ்யா , மூலிகை பூச்சி விரட்டி , மண்புழு உரம் , கோபர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்ற வற்றை பெறுவதால் நீங்கள் பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயன் அடையாலாம் .

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ...