Saturday, 19 August 2017

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!!

குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது.இது குறித்த கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன் நண்பர்களே...அதிலிருந்து சில முக்கியத் தகவல்கள் உங்களுக்காக....
குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான்.
கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் குடம்புளி 2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது. தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது.
தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை.
மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும். அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் காரணமாக பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதை கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம். நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது.
குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை. மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது.
குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை.
அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம்.
இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது என்கிறது அந்தக் கட்டுரை.

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்

கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.
தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.
நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.
பண்ணை அமைக்கும் முறைகள்:
நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.
பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.
காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:
குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.
ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.
குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.
ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?* Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

பூச்சிகளை கவனிங்க – பகுதி 3*

*பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?*

நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை என்பதை மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடுகள், இனப்பெருக்கம், வகை பிரித்து கண்டறிவது எப்படி என்பன போன்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக இந்த பதிவு அமைகிறது!
Image may contain: text
*பயிரை தாக்கும் பூச்சிகள் (Agricultural pests)*
நமது புரிதலுக்காக பயிரை தாக்கும் பூச்சிகளை, "தீமை செய்யும் பூச்சிகள்" என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் உணவு பழக்கம், உடல் அமைப்பு, இனப்பெருக்கம் செய்யும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் பல வகைகளாக நாம் அடையாளப் படுத்தலாம்.
*1, இலையைத் சாப்பிடும் பூச்சிகள்*

இதில் புழுக்களும், பூச்சிகளும் அடங்கும். இதன் வாய் வெட்டும் தன்மையுடன் இருக்கும். உதாரணம் வெட்டுகிளி, பச்சைக் காய்புழுக்கள், ஒரு சில தரைவண்டுகள், காண்டாமிருக வண்டுகள்.
*2, சாறு உறிஞ்சும் பூச்சிகள்*
அசுவினி, வெள்ளை ஈ, மாவுபூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன், செதில்பூச்சி போன்றவை சாறு உறிஞ்சும் பூச்சிகளாகும். இத்தகைய பூச்சிகளுக்கு இரண்டு குழல்கள் இருக்கும், ஒன்று எச்சிலை உமிழ்வதற்கும், மற்றொன்று சாறை உறிஞ்சுவதற்கும் பயன்படுகிறது.
*3, தண்டு மற்றும் வேர்பகுதியை தாக்கும் புழுக்கள்*
கரும்பு இடைக்கணுப்புழு, நெல்லின் குருத்துபுழு, பருத்தியின் காய்புழு போன்றவை இந்த ரகத்தில் சேர்ந்தவை.
*அசுவினி*
அசுவினிப்பூச்சிகள் சாறு உறுஞ்சும் வகையைச் சேர்ந்தவை. வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேல் படர்ந்திருக்கும், வகைக்கு ஏற்ப நிறத்தில் சிறிய மாற்றமிருக்கும் ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். பொதுவாக இவைகளுக்கு இறக்கை கிடையாது. எனினும் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அவை நினைத்தால் இறக்கை முளைக்கும்.
*அசுவினி இனப்பெருக்கம்*
இப்பூச்சிகள் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்பவை. அசுவினியின் வாழ்நாள் 21 நாட்கள், பெண் பூச்சிகள் பிறந்து 7 நாள் ஆன உடனே ஆண் துணை இன்றியே குட்டி போடத் துவங்கிவிடும். ஒரு நாளில் 40 குஞ்சுகளைப் போடும். பிறந்த குஞ்சுகளும் 7வது நாளில் இருந்து இனப்பெருக்கம் செய்யும் திறனை அடைந்துவிடும். 7வது நாளில் தொடங்கி இறக்கும் வரை குஞ்சுகள் போடும், இவ்வாறு பூச்சிகளின் இனப்பெருக்கம் 40 மடங்காக பெருகுவதால் சில நாட்களிலேயே பூச்சிகளின் எண்ணிக்கை கோடியை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இயற்கையில் இவ்விதம் நடப்பதில்லை. அசுவினியின் அபரிமிதமான இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையே பொறிவண்டு போன்ற இறைவிழுங்கிப் பூச்சிகளை உருவாக்கியுள்ளது. பொறிவண்டுகள் அசுவினியை உண்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மழை பொழியும் போதும் இந்த பூச்சி பெரிதளவில் கட்டுப்படுத்தபடுகிறது.
வேர்பகுதியை தாக்கும் அசுவினிகளும் உண்டு. உதாரணமாக வாழையில் அசுவினிகள் வேர்க் கிழங்கில் காணப்படுகிறது.
*அசுவினி வெளியேற்றும் சர்க்கரை திரவம்*
அசுவினிகள் சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றன, இவை கருப்பு எறும்புகளுக்கு உணவாகிறது. எனவே அசுவினியை சுற்றிச்சுற்றி எறும்புகள் மேய்ந்து கொண்டு இருக்கும். எனவே அசுவினியை பொறிவண்டுகள் தாக்கினால், பொறிவண்டை எறும்புகள் தாக்கும். ஆனால் இத்தகைய தாக்குதலை எல்லா சூழ்நிலைகளிலும் காண இயலாது.
*நெல்பயிரை தாக்கும் பூச்சிகள்*
ஆணைக்கொம்பன் ஈ, தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி), இலைப்பேன், பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு, கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) மற்றும் நெல் ஸ்கிப்பர்
*ஆணைக்கொம்பன் ஈ*
முட்டையில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் நெல் பயிர்களின் தூர்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது. அந்த தூர் வெங்காயக் குறுத்து போன்று உள்ளே ஓட்டையுடன் காணப்படும். குறுத்து ஊதுபத்தி போல் உருண்டையாக மாறிவிடும். இதில் இருந்து கதிர்கள் வெளிவராது.
*தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி)*
அது அந்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. அந்துப்பூச்சிகள் வெண்மை அல்லது இள மஞ்சள் நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன் இருக்கும். நாற்றங்காலில் அல்லது நாற்று நட்டு சில நாட்களில் இலைகளின் நுனியில் முடையிடுகின்றன. முட்டையில் இருந்து வரும் புழுக்கள் குறுத்தை அடைந்து இளங்குறுத்துக்களை உண்கின்றன.
*கட்டுப்படுத்தும் முறை*
ட்ரைகோகிராமா ஒட்டுண்ணிகள் இப்புழுக்களை கட்டுப்படுத்தக் கூடியவை. பயிர்களின் இலைகளில் காணப்படும் முட்டைக் குவியல் உள்ள இலைகளை களைதல், நாற்றங்காலில் 15வது நாளில் ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசல் அடிப்பது பாதுகாப்பானது. குறுத்து புழுவினால் நன்மையும் உண்டு! குறுத்துப்புழுவினால் தாக்கப்பட்ட பயிர் அதிகமாக தூர் வெடிக்கும்.
'புகையான்'
புகையான் என்பது தத்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. பயிர்கள் நெருக்கமாக இருக்கும் போது இதன் தாக்குதல் அதிகம் இருக்கும். பயிர்கள் வட்ட வட்டமாக கருகுவது இதன் அறிகுறியாகும்.
*நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய புரிதல்*
விலங்குகளில் எப்படி சிங்கம் ஒரு மானை அடித்து உண்கிறதோ அவ்வாறே சில அசைவப் பூச்சிகள் மற்ற பூச்சிகளை பிடித்து உண்கிறது. இப்படிப்பட்ட அசைவப்பூச்சிகள் விவசாயிகளுக்கு நன்பனாக செயல்படுவதால் அவை நன்மை செய்யும் பூச்சிகள் என்று கூறப்படுகிறது. இவை பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளை உண்கின்றன.
இறையை நேரிடியாக கொன்று உண்டால் அவை இறைவிழுங்கிகள் எனப்படுகிறது. ஒரு சில பூச்சிகள் மற்ற பூச்சிகளின் புழுக்கள் மீது முட்டையிட்டு அவற்றை அழிக்கிறது, இப்படிப்பட்டவை ஒட்டுண்ணிகள் எனப்படுகிறது.
*இறைவிழுங்கிகள்*
இவற்றின் வாழ்நாள் 30 முதல் 50 நாட்கள் வரை இருக்கும். இவை நேரடியாக எதிரிப்பூச்சியை பிடித்து உண்ணும், அதற்கேற்ப பலமான வாய், இறக்கை போன்றவற்றை பெற்றிருக்கும், சுறுசுறுப்பானவை, அதனுடைய உணவுப்பூச்சிகளை விட பெரிய வடிவில் இருக்கும். பலவகையான பூச்சிகளை பிடித்து உண்ணும், அதிகபட்சமாக 50 வகையான பூச்சிகளை பிடித்து உண்ணக்கூடியவை. அதன் உணவு பூச்சியின் முட்டை, புழு, பூச்சி என எல்லா பருவத்திலும் தாக்கி உண்ணும்.
*பொறிவண்டு*
அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டுகளை சாதாரணமாகக் காணமுடியும்.
பொறிவண்டுகள் அரைத் துவரம் பரும்பு அளவில் இருக்கும். இதன் முதுகுப்புறம் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், சில வகைகளில் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும்.
அசுவினிப் பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே தாய் பொறிவண்டு முட்டையை இடுகிறது.
பொறிவண்டின் இளம் புழு பருவத்தில் அசுவினியின் சாற்றை உறிஞ்சி குடிக்கிறது, சற்று வளர்ந்த புழு அசுவினியை பிடித்துத் திண்கிறது. இளம் புழுவில் இருந்து பொறிவண்டாக மாறும் வரை 300 அசுவினியை பிடித்து திண்கிறது. இதனால் அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்னை பெருமளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
*எச்சரிக்கை போலி பொறி வண்டுகளும் உண்டு*
போலி பொறிவண்டுகள் தீமை செய்யும் வகையைச் சார்ந்தது. இதன் லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பொறிவண்டுகள் இரண்டும் இலைகளை தின்னக்கூடியவை.
நன்மை செய்யக் கூடிய பொறிவண்டின் முதுகில் இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 10-12 வரை இருக்கும். புள்ளிகளின் எண்ணிக்கை 12க்கு மேல் இருந்தால் அது போலி பொறிவண்டு. சில நேரங்களில் போலி பொறிவண்டுகளின் முதுகின் மீது நுண்ணிய இழைகள் இருக்கும்.
*அசுவினி ஈ*
இந்த ஈ புழு பருவமாக இருக்கும் போது அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகளை துளைத்து அதன் சாற்றை குடிக்கிறது.
*செங்குளவி*
பச்சை காய்புழுக்களை குளவிகள் பிடித்து வந்து அதன் கூட்டுக்குள் போட்டு அந்த புழுவின் மீது தனது முட்டைகளை இட்டுவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு பச்சைகாய்புழுதான் அதற்கு பிரியாணி. இந்த புழுக்கள் கூட்டிலேயே முழுவளர்ச்சி அடைந்து வளர்ந்த குளவியாக வெளிவருகிறது.
*நீள் கொம்பு வெட்டுக்கிளி*
இந்த வெட்டுக்கிளியின் தோற்றம் மற்ற வெட்டுகிளியை போன்று முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையாக இருக்கும், அதன் உணர் இழை வெட்டுக்கிளியின் உடல் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். இது காய்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் புழுக்களை திண்ணக்கூடியது
*தொழுவெட்டுக்கிளி*
இந்த பூச்சியை பெருமாள் பூச்சி அல்லது கும்பிடு பூச்சி என்றும் அழைக்கின்றனர், இந்த பூச்சியை இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் பார்ப்பது அரிது, இயற்கை விவசாயம் செய்யும் நிலங்களில் மட்டுமே பார்க்க இயலும்.
*தட்டான் (தும்பி)*
தும்பியும் பூச்சிகளை தின்றே உயிர் வாழ்கிறது, தண்ணீர் உள்ள நெல்வயலில் தும்பிகள் முட்டையிட்டுகின்றன, பின் அதில் வளரும் இளம் புழுக்கள், தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்களை உண்டு வளர்ந்து கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும். வளர்ந்த தும்பிகள் பயிரில் உள்ள பூச்சிகளை பிடித்து திண்ணும்.
*கொலைகார நாவாய் பூச்சி*
நாவாய் பூச்சிகளில் நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என்று இரண்டும் உண்டு. கொலைகார நாவாய் பூச்சிகள் புழுக்கள் மற்றும் முட்டைகளை உண்டு வாழக்கூடியவை. காய்புழுக்களை கட்டுப்படுத்துவதில் இந்த வகை நாவாய்பூச்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பூச்சியை இன்பெருக்கம் செய்து வயலில் விடும் தொழில் நுட்பத்தை வேளாண் பல்கலைக் கழகங்களை அனுகி தெரிந்து கொள்ள முடியும்.
*தரைவண்டுகள்*
தரைவண்டுகளில் சில வகைகள் நன்மை செய்யக்கூடியவையாகவும், சில வகைகள் தீமை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக ஒபியோனியா என்ற தரை வண்டு புகையான், தத்துப்பூச்சிகள், இலை மடக்குப்புழு போன்ற நெற் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த கூடியது.
*சிலந்திகள்*
சிலந்திகள் வயல்வெளிகள், தோட்டங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு சில சிலந்திகள் வலை கட்டாமலேயே நேரடியாக பூச்சிகளை பிடித்துத் திண்ணக்கூடியவை.
நன்மை செய்யும் பூச்சிகளில் சிலந்திகள் மிக முக்கியமானவை சிலந்திகள். இவை பூச்சி இனங்களை சார்ந்தது அல்ல என்பதை அவைகளுக்கு உள்ள எட்டு கால்களே உறுதிப்படுத்திவிடும். பூச்சிகளின் சில பன்புகளை ஒத்திருப்பதாலும் பூச்சிகளின் வாழ்விடத்திலேயே சேர்ந்து வாழ்வதாலும் சிலந்திகள் ஒரு பூச்சியைப் போன்றே கருதப்படுகிறது.
இவை ஆயிரக்கணக்கில் முட்டையிடக்கூடியது எனினும் முட்டையில் இருந்து வெளிவரும் குச்சுகளில் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் மட்டுமே பெரிய சிலந்தியாக வளர்கிறது. மேலும் இவை தன் இனத்தையே உண்ணக்கூடியவை. (Cannibalism)
*சிலந்திகளைப் பற்றிய ஒரு தகவல்*
பயிற்சிக்கு தேவையான ஆயத்தப்பணிகளை செய்வதற்காக பயிற்சி நடப்பதற்கு ஒரு மாதம் முன்பே கதிராமங்களத்திற்கு சென்றிருந்தோம், அப்போது நெல்வயல்களை பார்வையிட்டபோது, நன்கு வளர்ந்த பயிரின் நுனியெல்லாம் கொத்து கொத்தாக வளைந்து சாய்ந்திருந்தது, அதைப் பார்த்ததும் அவை ஏதோ பூச்சிகளால் தாக்கப்பட்டுள்ளது போல தோன்றியது, ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது பயிரின் நுனியை மடித்து ஆர்ப் சிலந்திகள் (Orb spiders) வலை கட்டியிருந்ததை காண முடிந்தது.
ஒரு வலையில் ஒரு சிலந்தியும் நான்கைந்து முட்டைக்கூடுகளும் காணமுடிந்தது. 10 சதுர மீட்டருக்குள் 20 சிலந்தி என்ற எண்ணிக்கையில் இருந்தது. பொதுவாக சீமைக்கருவேல மரங்களில் காணப்படும் இந்த வகை சிலந்திகளை வயலில் கண்டது அரிதானது. மேலும் இவ்வளவு சிலந்திகள் இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் காணஇயலாது. இயற்கை விவசாயம் செய்யும் பண்ணை என்பதால் காணமுடிகிறது, மேலும் மற்ற சில இடங்களில் நீள் தாடை சிலந்திகளையும் காணமுடிந்தது.
பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...

உலகெல்லாம் புகழ்பரப்பும் முருங்கை! Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

உலகெல்லாம் புகழ்பரப்பும் முருங்கை!

அமெரிக்கா இதனையும் உரிமை கேட்கிறது.
நாட்டு மருந்துகளுக்கு புகழ் பெற்ற சீனாவில்கூட தற்போது முற்றிய முருங்கைக்காயின் காய்ந்த விதைதான் இனிப்பு நோயினைக் கட்டுப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மலேசியா, சிங்கப்பூர்களில் மலாய்க்காரர்கள், சீனர்கள் ஒரு கிலோ முருங்கை விதை ரூ1500க்கு மேல் விலை கொடுத்து வாங்கி, டீ போல் கசாயம் செய்து குடிக்கிறார்கள். தற்போது விட்டமின் குப்பிகளை விற்கும் அனைத்து புகழ்பெற்ற நிறுவனங்களுமே, முருங்கை இலையினைக் காயவைத்து பொடி செய்து கேப்சூல் வழி விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாறிக்கிறார்கள். எனது ஆந்திர நண்பர் ஒருவர் முருங்கை இலைகளைச் சேகரித்து பொடி செய்து லண்டனுக்கு அனுப்பும் தொழிலினைச் செய்து
பொருளீட்டி வருகிறார்.
நெல்லிக்காய் பொடி, பிரண்டை பொடிகளைப் போல் இப்போது முருங்கைப் பொடியும் பிராண்ட் பெயருடன் இந்தியாவிற்கே வந்து ஒரு குப்பி 550 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
நாமோ இன்னும் இதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் எனது வீட்டில், என் மனைவியிடம் ஒரு கட்டளையாகவே (கெஞ்சித்தான்) சொல்லி, வாரமொருமுறை முருங்கைக்கீரை சமைக்கச்சொல்லி பிள்ளைகளுக்குக் கொடுத்து வருகிறோம். ஏதோ முருங்கைக் காயின் ருசியினால் மட்டும் அவ்வப்போது அதன் மருத்துவ குணம் அறியாமல் சாப்பிட்டு வருவது சிறந்ததாய் இருக்கிறது.
முருங்கை இலை, காய், பூ, விதை என இம்மரத்தின் பிசான்கூட அருமருந்தாகும். இதன் சாற்றினை இப்போது பல்வேறு குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே, கண்முன் இருக்கின்ற நல்லவைகளை விட்டுவிட்டு மருத்துவத்தில் தரப்படும் இதன் சாற்றினை விலை கொடுத்து வாங்காதீர்கள்.
நமக்கு நம் முன்னோர் விட்டுச்சென்ற அருமருந்து உணவுகளில், வரும்முன் காக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று!
படித்தோம், பகிர்ந்தோம் என்றில்லாமல் நீங்களும் உங்கள் இல்லங்களில் கட்டளையிட்டாவது (!!!) முருங்கைக் கீரையினை உணவில் சேர்க்கும் முறையினைப் பின்பற்றுங்கள்.

ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் . Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் .

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன .
அவை சாணம் மற்றும் கோமியம் .
நாம் செய்ய வேண்டியது …
Image may contain: one or more people and people standing
1) சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்து கொடுப்பது ( சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும் )
2) சாணமும் கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்குமாறு செய்யவேண்டும்

3)கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து பிரித்து எடுத்து கொண்டு பஞ்ச காவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம் .
4) சாணத்தை கோபர் gas தயாரிக்க பயன்படுத்தவும் . அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும் .
5) கோபர் gas தயாரித்த பின் , மிச்சம் உள்ள sludge ஐ மண்புழு உரம் தயாரிக்க பயன் படுத்தவும் .
6) கோபர் gas தயாரிக்க பயன்படுத்தப்படும் tank இல் பழைய காப்பர் wire மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும் . sludge ஐ மண்புழு உறதிர்க்காக எடுத்த வுடன் மீதமிருக்கும் slurry யை தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு அனுப்பவும் . ( மினரல் குறைபாட்டால் தான் மாடுகள் சினைபிடிப்பில் கோளாறுகள் வருகின்றன , அதை இப்படி செய்வதன் மூலம் தவிர்க்கலாம் ).
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் , பஞ்ச காவ்யா , மூலிகை பூச்சி விரட்டி , மண்புழு உரம் , கோபர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்ற வற்றை பெறுவதால் நீங்கள் பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயன் அடையாலாம் .

3 ஏக்கர்… 100 நாள்கள்… ரூ 2 லட்சம் லாபம்! – பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

3 ஏக்கர்… 100 நாள்கள்… ரூ 2 லட்சம் லாபம்! – பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை.

பொதுவாக, வேளாண்மைத்துறை நடத்தும் பயிர் விளைச்சல் போட்டிகளில் ரசாயன விவசாயிகள்தான் கலந்துகொண்டு பரிசுகளைப் பெறுவார்கள். ஆனால், இயற்கை முறையில் நிலக்கடலை விளைவித்துப் பயிர் விளைச்சல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றிருக்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐயப்பன் இருவரும். ஆய்வுக் குழு நடத்திய சோதனையின்போது, ஹெக்டேருக்கு No automatic alt text available.10,168 கிலோ ஈர நிலையிலான நிலக்கடலையை மகசூல் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. நான்கு நாள்கள் காய்ந்த நிலையில், ஏக்கருக்கு 1,840 கிலோ காய்ந்த நிலக்கடலை மகசூல் கிடைத்துள்ளது.

அறுவடை செய்த நிலக் கடலையை மூட்டை பிடித்துக்கொண்டிருந்த பிரகாஷ், ஐயப்பன் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். நிறைந்த சந்தோஷத்துடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நம்மிடம் பேசிய பிரகாஷ், “நாங்க இரண்டு பேரும் உறவினர்கள். எனக்குச் சொந்த ஊர் கொத்தம்பட்டி. ஐயப்பனோட ஊர், குரும்பூண்டி. ரெண்டு பேருமே விவசாயக் குடும்பம்தான். இது, எங்களோட சொந்தக்காரங்க நிலம். முதுகுளம் என்கிற கிராமத்துல அமைஞ்சிருக்கு. எங்க நிலத்துல தண்ணீர் இல்லை. அதனால, இந்த மூணு ஏக்கர் நிலத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்றோம். இயற்கை விவசாயத்துக்கு வந்ததற்கான காரணம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும், ‘பசுமை விகடன்’ புத்தகமும்தான்.
இங்க போர்வெல்லுல (ஆழ்துளைக் கிணறு) போதுமான அளவு தண்ணீர் இருக்கு. ஐயப்பன், 9 மாடுகளும் 35 ஆடுகளும் வெச்சிருக்கார். அதனால எருவுக்குப் பஞ்சமில்லை. தாராளமா எரு போடுறதால மண் நல்ல வளமா இருக்கு. நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாத்துனதுல இருந்தே ரசாயன விவசாயத்துக்கு இணையா மகசூல் கிடைச்சுட்டு இருக்கு. போன வருஷம் ஏக்கருக்கு எட்டு டன்னுங்கிற கணக்குல எரு போட்டு மக்காச்சோளம் சாகுபடி செஞ்சோம். பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம்னு கொடுத்ததுல ஏக்கருக்கு 23 மூட்டை மகசூல் கிடைச்சது” என்றவர் தொடர்ந்தார்…
“இந்த வருஷம் ஏக்கருக்கு 15 கிலோ வீதம் சணப்பு விதை விதைச்சோம். வழக்கமா எட்டுக் கிலோதான் விதைப்பாங்க. நாங்க அதிகளவுல விதைச்சதால, சணப்பு நெருக்கமா முளைச்சுக் களைகள் வரலை. நாப்பது நாள் கழிச்சு நிலத்துல வளர்ந்திருந்த சணப்பையை மடக்கி உழுதோம். இதுமூலமா, மண்ணுக்குத் தேவையான தழைச்சத்தும் நிறைவாகக் கிடைச்சது. சணப்புக்கே சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுதான் தண்ணீர் கொடுத்தோம். அதை மடக்கி உழுது பத்து நாள் கழிச்சு எரு போட்டு நிலக்கடலை விதைச்சோம். நிலக்கடலைக்கு வழக்கமான இயற்கை இடுபொருள்களோடு, நிலக்கரி சாம்பல் திரவத்தையும் (ஹியூமிக் அமிலம்) கொடுத்தோம். அதனால, பயிர் நல்லா செழிப்பா விளைஞ்சது. செடிகள்ல அதிக எண்ணிக்கையில கிளைகள் உருவாகி காய்களும் திரட்சியா இருந்துச்சு.
சுற்று வட்டார விவசாயிகள் எல்லோருமே ஆச்சர்யப் பட்டுட்டாங்க. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இல்லாமலே இவ்வளவு சிறப்பா விளைஞ்சிருக்குதானு ஆய்வுக்கு வந்த வேளாண் துறை அதிகாரிகளே கேட்டாங்க.
மூணு ஏக்கர்ல நிலக்கடலைச் சாகுபடி செஞ்சிருந்தோம். இயற்கை முறையில விளைஞ்சதால நல்ல சுவையும் இருக்கு. மரச்செக்கு வெச்சிருக்கிற இயற்கை விவசாயிகள், சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிக்கிட்டாங்க” என்ற பிரகாஷ் வருமானம் குறித்துச் சொன்னார்.
“மூணு ஏக்கர்ல 5,520 கிலோ நிலக்கடலை மகசூலாச்சு. ஒரு கிலோ 57 ரூபாய்னு 5,200 கிலோ அளவுக்கு விற்பனை செஞ்சுட்டோம். மீதி 320 கிலோவை இருப்பு வெச்சிருக்கோம். அந்த வகையில், 5,520 கிலோவுக்கும் கணக்குப் போட்டால் 3,14,640 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக 2,23,140 ரூபாய் லாபமா நிக்கும். ஒரு ஏக்கருக்குன்னு பாத்தா 74,380 ரூபாய் லாபம் வரும். நூறு நாள்ல இந்த அளவுக்கு லாபம் கிடைக்கிறது, எங்களுக்கு நிறைவா இருக்கு. அதே நேரத்துல நிலக்கடலைக்காக பரிசு வாங்கினதும் மகிழ்ச்சியா இருக்கு. அடுத்த முறை முதல் பரிசு வாங்கணும்ங்கறதுதான் எங்களோட ஆசை” என்று சொல்லி விடைகொடுத்தார் இன்முகத்தோடு.

பஞ்சகவ்யா தயாரிப்பு!
இதற்கு ஒன்பது பொருள்கள் தேவைப்படும். நாட்டு மாடு, கலப்பின மாடு என எந்த வகையான மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு முறை: கடலைப் பிண்ணாக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்பே நீரில் ஊற வைத்து விடவும். பின்பு, எல்லா பொருள்களையும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் கலந்து நிழலில் வைக்கவும். தூசு, தும்பு படாமல் இருக்க, மெல்லிய துணியால் வேடுகட்டி வைக்கலாம். தினமும் இந்தக் கலவையைக் கலக்கி விட வேண்டும். இதனால், மீத்தேன் வாயு வெளியேறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். ஏழு நாள்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். இதன்மூலம் ஏறத்தாழ 20 லிட்டர் பஞ்சகவ்யா கிடைக்கும்.
10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம் (கீரைக்கு மட்டும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்). ஒருமுறை தயாரித்த பஞ்சகவ்யாவை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இது எல்லா பயிர்களுக்கும் தெளிக்கவல்ல வளர்ச்சி ஊக்கியாகும். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு, 30 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசனநீருடன் கலந்துவிடலாம்.
இதனால் மண்வளம் கூடும்; அதிக பூக்கள் பூக்கும்; காய் கனிகள் சுவையாக இருக்கும். பூச்சி நோயும் எளிதில் அண்டாது. விளைச்சலும் கூடுதலாகக் கிடைக்கும். பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும்போது, இதைத் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பயிர்களுக்குத் தெளித்து வரலாம்.
இப்படித்தான் செய்யணும் நிலக்கடலைச் சாகுபடி!
ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து பிரகாஷ் சொன்ன விஷயங்கள் இங்கே…
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், 15 கிலோ சணப்பு விதைகளை விதைத்து, ரோட்டோவேட்டர் மூலமாக மண்ணை லேசாகக் கிளறிவிட வேண்டும். பிறகு, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாள் சொட்டுநீர்க் குழாய்களை எடுத்துவிட்டுச் சணப்பு செடிகளை மடக்கி உழுது பத்து நாள்கள் விட வேண்டும். பிறகு, 6 டன் எருவைக் கொட்டி உழுது, நிலத்தைச் சமப்படுத்தி… 80 கிலோ விதைக்கடலையை விதைக்க வேண்டும். விதைக்கு விதை 4 அங்குலம், வரிசைக்கு வரிசை 6 அங்குலம் இடைவெளி விட வேண்டும். பிறகு, அதற்கேற்றவாறு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
விதைத்த 15, 25, 35 மற்றும் 45-ம் நாள்களில், பாசனத் தண்ணீரோடு 3 லிட்டர் ஹியூமிக் அமிலத்தைக் கலந்து விட வேண்டும். 25-ம் நாள், 150 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும்.
35-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மூலிகைப் பூச்சி விரட்டியும், 40-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ஹியூமிக் அமிலத்தையும், 50-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலத்தையும், 65-ம் நாள் 125 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் கடல்பாசி திரவத்தையும் கலந்து தெளிக்க வேண்டும். 98-ம் நாளுக்கு மேல் நிலக்கடலை அறுவடைக்குத் தயாராகிவிடும்.
மீன் அமினோ அமிலம்
ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் பிளாஸ்டிக் வாளியில் போட்டு காற்றுப் போகாமல் மூடி வைத்தால், 40-ம் நாள் தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இத்திரவத்திலிருந்து துளிகூட கெட்ட வாடை வீசாது. பழ வாடை வீசும். இப்படி வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்று அர்த்தம்.
மீன் அமினோ அமிலம் என்பது வளர்ச்சி ஊக்கி. இதைத் தெளித்தால் பயிர்கள் பசுமைகட்டி வளர்ந்து நிற்கும். 10 லிட்டர் நீரில் 500 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒருமுறை தயாரிக்கும் அமினோ அமிலத்தை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும்போது அமிலத்தை எடுத்துக்கொண்டு வாளியை நன்றாக மூடி வைக்கவேண்டும். நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்தத் திரவத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
மூலிகைப் பூச்சிவிரட்டி
நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடா, வேம்பு போன்ற இலை தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயார். அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச் சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. அதைக் கலப்பதால் நோய் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச் சிறுநீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இப்படி தெளிக்கும்போது பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி மற்றும் புழுக்களை விரட்டும். ஏழு நாள்களுக்கு மேல் ஊறவைத்தால், பயிர் வளர்ச்சி ஊக்கியாக இது மாறிவிடும். அதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.

Image may contain: 2 people, people sitting
No automatic alt text available.

ஒரு முறை விதைப்பு... மூன்று போகம் மகசூல்! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை!! 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபம்.Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஒரு முறை விதைப்பு... மூன்று போகம் மகசூல்! செழிப்பான வருமானம் கொடுக்கும் செடிமுருங்கை!! 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபம்..

*எல்லா வகையான மண்ணிலும் செடிமுருங்கை சாகுபடி செய்யலாம்.
*ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம்.
Image may contain: plant, tree, outdoor and nature
*பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.
*விதைப்பு செய்வதற்கான செடிமுருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.
“ரசாயன விவசாயம் மண்ணுக்கும் மனிதஉடலுக்கும் தீங்கானதுனு எங்களுக்கும் நல்லாவே தெரியுது. இயற்கை விவசாயம் செய்யணும்னு
எங்களுக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, அதுக்கு மாடு வளர்த்தாகணும். ரொம்ப சிரமம். எனக்குள்ள சூழல் அதுக்கெல்லாம் ஒத்துவராது’’ இது போன்ற ஆதங்கக் குரல்கள் தற்போது அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறன. இவர்களுக்கு நடுவே ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, மாடுகள் இல்லாவிட்டாலும், இயற்கை விவசாயம் வெற்றிகரமாக செய்யமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கோபாலன். இவர் வேளாண் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் இருக்கும் தனது பூர்வீக நிலத்தில் இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
பச்சைப்பசேலென செழிப்பாக காட்சி அளிக்கிறது கோபாலனின் ஸ்ரீரங்கா இயற்கை விவசாயப் பண்ணை. செடிமுருங்கை, பப்பாளி, தென்னை, மாதுளை, எலுமிச்சை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் என விதவிதமான பயிர்கள்... கடும் கோடையிலும் பசுமை படர்ந்திருக்கிறது.
‘‘இந்தப் பண்ணையோட மொத்தப் பரப்பு ஒரு ஏக்கர்தான். இது எங்களோட பூர்வீக நிலம். 25 வருஷமா விவசாயம் செய்யாம சும்மாவேதான் கிடந்துச்சு. நான், வேளாண் பொறியியல் துறையில நீர்மேலாண்மைப் பிரிவில் வேலை பார்த்தப்ப, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்துகிட்ட சில கருத்தரங்குகள்ல நீர் மேலாண்மை பத்தி பேசியிருக்கேன். அவரோட ஏற்பட்ட அறிமுகம், இயற்கை விவசாயத்து மேல ஒரு ஈடுபாட்டைக் கொடுத்துச்சு. ஆனாலும், வேலையில இருந்ததுனால விவசாயம் செய்ய நேரம் கிடைக்கலை. பணி ஒய்வுக்குப் பிறகும் சில வருஷமா சும்மாதான் இருந்தேன். இப்ப எனக்கு 72 வயசு. ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சதும் ஆர்வம் அதிகமாகி, ரெண்டரை வருஷமாத்தான் இந்த நிலத்துல விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். இதுக்காக, தினமும் திருச்சியில இருந்து வந்து போயிகிட்டு இருக்கேன். தலா 25 சென்ட்ல செடிமுருங்கை, பப்பாளி, 50 சென்ட்ல மாதுளை, மா, பலா, எலுமிச்சை, வேலியோரத்துல தென்னை, தேக்கு, மகோகனி, ரோஸ்வுட் சாகுபடி செஞ்சிருக்கேன். செடிமுருங்கை, பப்பாளி ரெண்டும் நடவுபண்ணி 20 மாசமாகுது. இதுல இருந்து வருமானம் வந்துகிட்டு இருக்கு. மத்த மரங்கள் இனிமேதான் பலன் கொடுக்கும். ஓட்டுமொத்த நிலத்துக்கும் சொட்டுநீர் அமைச்சி பாசனம் செஞ்சிகிட்டு இருக்கேன். இங்க நிரந்தரமா தங்கி இருக்க ஆள் கிடைக்காததால மாடுகளை வளர்க்க முடியலை. அதனால, வெளியில இருந்து ஆட்டு எரு, மண்புழு உரம், மாதிரியான உயிர் உரங்களை விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். செடிமுருங்கையில நான் எதிர்பார்த்ததைவிட நிறைவான லாபம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. மற்ற பயிர்களும் வெற்றிகரமாக விளைஞ்சிக்கிட்டு இருக்கு’’ என்று சொன்னவர் வரவு, செலவு கணக்கு பற்றி பேசத் தொடங்கினார்.
ஒரு முறை விதைப்பு... மூன்று போகம் மகசூல்!
‘‘இது செம்மண் பூமி. செடிமுருங்கை சிறப்பா விளையுது. இதுல, பெரிய பிரச்னையா இருக்கக்கூடியது, புரூட்டோனியா புழு, கம்பளிப் பூச்சித்தாக்குதல்தான். ஆனா, என்னோட செடிகள்ல அதுங்களோட தாக்குதல் கொஞ்சம் கூட இல்லை. பொதுவாகவே செடிமுருங்கைக்கு தண்ணி அதிகம் தேவைப்படாது. இயற்கை உரங்கள் கொடுக்கிறதுனால மண்ல ஈரத்தன்மை இருந்துகிட்டே இருக்கு. வாரம் ஒரு முறை சொட்டுநீர்ப்பாசனம் மூலமா அரைமணி நேரம்தான் தண்ணி கொடுக்கிறோம். இயற்கை இடுபொருட்கள் மட்டுமே கொடுக்கிறதுனால, செடிகள் செழிப்பாகவே இருக்கு. காய்கள் நல்லா சதைப்பற்றோடு சுவையா இருக்கு. விதைப்பிலிருந்து 6-வது மாசத்துல செடிக காய்ப்புக்கு வந்து அடுத்த 6 மாசத்துக்கு மகசூல் கொடுக்குது. மொத்தம் 240 செடிக இருக்கு. செடிக்கு 10 கிலோ கணக்குல 2,400 கிலோ காய்கள் கிடைச்சுது. அதுல ஆயிரத்து 400 கிலோவை, காயா வித்தேன். ஒரு கிலோ சராசரியா 25 ரூபாய் வீதம் 35 ஆயிரம் ரூபாய் விலை கிடைச்சுது. ஆயிரம் கிலோ காயை, செடியிலயே நல்லா முத்தவிட்டு, அதுல இருந்து நல்ல தரமான முளைப்புத் திறன்மிக்க, செதில்களோடு இருக்கிற விதைகளை எடுத்தேன்.
50 கிலோ கிடைச்சது. விதைப்பு செய்ற முருங்கை விதை, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமா, 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. 25 சென்ட் செடிமுருங்கை சாகுபடியில முதல் போகத்துல மட்டும் மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக, 65 ஆயிரம் ரூபாய் நிகர லாபமாக கையில நின்னது.
முதல் போக காய்ப்பு முடிஞ்சதும் செடிகளைக் கவாத்து செஞ்சு, இயற்கை உரங்களைக் கொடுத்தோம். அடுத்த 6 மாசத்துல செடிகள் நல்லா வளர்ந்து இப்ப இரண்டாம் போகம் காய்ப்பு தொடங்கியிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.


மண்... பருவம்... ரகம் ஏற்றது!
செடிமுருங்கை சாகுபடியில் அனுபவம் பெற்ற தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘செடிமுருங்கைக்கு வடிகால் வசதியுடைய நிலமும், ஈரம் கோக்காத மண்ணும் இதற்கு அவசியம். ஆடி, கார்த்திகை, தை ஆகிய பட்டங்களில் விதைப்பு செய்யலாம். பி.கே.எம்-1, 2 ஆகிய ரகங்கள் சிறப்பானவை.
புரூட்டோனியா புழுத் தடுப்புமுறை!
செடிமுருங்கையில் புரூட்டோனியா புழுத் தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க, 500 கிராம் பூண்டு, 20 கிராம் மிளகு, தலா அரை கிலோ நொச்சி, எருக்கன், வேம்பு, காட்டாமணக்கு இலைகளை உரலில் போட்டு இடித்து, இதனுடன் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 லிட்டர் தண்ணீர் கலந்து 3 நாட்களுக்கு ஊறவைக்கவேண்டும். இதனை வடிகட்டி, 200 லிட்டர் தண்ணீர் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
முருங்கை இலை பவுடர்!
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இலைகள் அதிகமாக இருக்கும். இதைப் பறித்து ஒரு வாரம் நிழலில் காய வைக்கவேண்டும். பூஞ்சணம் உருவாகாமல் இருக்க, காலை, மாலை இலைகளைப் புரட்டிவிட்டு காற்றோட்டம் ஏற்படுத்தவேண்டும். 9 சதவிகித ஈரப்பதத்துக்குக் காய்ந்ததும் (வாயில் போட்டால் மொறு மொறுப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்) மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி, 6 மாதங்கள் வரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். கீரை பவுடருடன் பூண்டு, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்து சூப்பு வைத்து குடிக்கலாம். முருங்கை இலை பவுடருடன் உப்பு, தண்ணீர் சேர்த்து துவையலாகவும் சாப்பிடலாம். புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, சாம்பாரில் இதைக் கலந்து சாப்பிட்டால், வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
Image may contain: plant, outdoor and food
ஊதுபத்தி அளவுள்ள பிஞ்சுகளைத் தேர்வு செய்து சுமார் ஒரு வாரம் நிழலில் காயவைத்து, மொறுமொறுப்புத் தன்மை வந்தவுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவேளை பசும்பாலில் இந்த பவுடர் 2 ஸ்பூன் அளவு கலந்து 5 மாதங்களுக்கு குடித்தால், சிறுநீரக நோய்கள் குணமாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வெண்புள்ளி நோய் போன்றவை குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
விதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு!
முருங்கைச்செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்கவேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத் தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்கவேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.
விதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்’’ என்கிறார் ஆசைத்தம்பி தொடர்புக்கு, ஆசைத்தம்பி செல்போன்: 96983-69927
செடிமுருங்கை சாகுபடி பாடம்!
25 சென்ட்நிலத்தில் செடிமுருங்கை சாகுபடி செய்யும் விதம் குறித்து கோபாலன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...
6 ம் மாதம் முதல் அறுவடை!
‘‘25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.
விதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கெனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில் 30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும். 40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியைக் கவாத்து செய்து, ஏற்கெனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால், தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.
பலன் கொடுக்கும் பப்பாளி!
25 சென்ட் நிலத்தில தலா ஆறரையடி இடைவெளியில 2 அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்து, ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி எல்லாத்தையும் கலந்து போட்டு பப்பாளிக் கன்றுகளை நடவு செஞ்சோம். இதுல 200 கன்னுங்க நல்லா தேறி செழிப்பா வளர்ந்துச்சு. 6-ம் மாசம் காய்ப்புக்கு வந்தப்ப ஒரு மரத்துக்கு அரை கிலோ, கோழி எரு வெச்சோம். காய்கள் நல்லா திரட்சியா, பெரிய சைஸ்ல ரொம்ப சுவையா இருந்துச்சு. ஒவ்வொரு பழமும் ஒண்ணேகால் கிலோவுல இருந்து ரெண்டு கிலோ எடைவரை இருக்கும். இதுவரைக்கும் ஒன்றரை டன் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா கிலோவுக்கு 25 ரூபாய் விலை கிடைக்குது’’ என்றார் கோபாலன்.

காடை வளர்ப்பு - Kaadai Valarpu Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

மாசம் 30 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்!
அசைவப் பிரியர்கள்… ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக விரும்புவது காடை இறைச்சியைத்தான். அதனால், காடைக்கு எப்போதும் விற்பனை வாய்ப்பு உண்டு. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஜப்பான் காடை வளர்ப்பில் ஈடுபட்டு பலர், நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன்.
காடைக் குஞ்சுப் பொறிப்பகத்தில், இன்குபேட்டரில் முட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைச் சந்No automatic alt text available.தித்தோம்.
”முன்னாடி மாற்றுமுறை வைத்தியம் செய்துக்கிட்டிருந்தேன். அதுல பெருசா வருமானம் இல்லாததால, கூடுதல் வருமானத்துக்காக ‘லவ் ஃபேர்ட்ஸ்’ வாங்கி வளர்த்து விற்பனை செய்துக்கிட்டிருந்தேன். அதுலயும் நிறைய சிக்கல்கள். இதனால வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு மாறினேன். கூடவே, கறிக்கோழியையும் வளர்க்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல மனைவிக்கு வேலை கிடைச்சு, வெளியூருக்குப் போக வேண்டி இருந்ததால, அந்தத் தொழிலையும் விட்டுட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, எங்க ஊருக்கே மாற்றலாகி வந்து, ஈமு கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல 7 லட்சம் ரூபாய் நஷ்டமாகிடுச்சு. அதுல இருந்து மீளமுடியாம துவண்டு கிடந்தப்போதான், நண்பர் ஒருத்தர் ஜப்பான் காடை பத்திச் சொன்னார். நாமக்கல், கால்நடைக் கல்லூரியில இருந்து 50 காடைக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கிடைச்ச முட்டைகள் மூலமா பெருக்கி, 200 தாய்க்காடைகளை உருவாக்கி, குஞ்சுகளை எடுக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு வளர்ந்த குஞ்சுகளை எங்க பகுதியில விற்பனை செஞ்சப்போ, நல்ல வரவேற்பு… நல்ல வருமானம். இதனால, தாய்க் காடைகளோட எண்ணிக்கையை ஐநூறா அதிகரிச்சிட்டேன். இப்போ 350 பெட்டை, 150 ஆண் காடை வெச்சுருக்கேன். இது மூலமா நாள் ஒன்றுக்கு 250 முட்டைகள் கிடைக்குது. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, ஒரு நாள் குஞ்சாவும், 28 நாள் வளர்ந்த காடையாவும் விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கேன்” என்ற ராஜேந்திரன், வளர்ப்பு முறைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
இறப்பைத் தடுக்கும் கோலி குண்டுகள்!
‘காடை வளர்ப்புக்குக் குறைவான இடம் இருந்தாலே போதுமானது. ஆரம்பத்தில் காடையைக் கறிக்காக வளர்ப்பதுதான் நல்லது. கொஞ்சம் அனுபவம் கிடைத்த பிறகு, குஞ்சு உற்பத்தியில் இறங்கலாம். ‘நாமக்கல் கோல்ட்’ காடை ரகம், ‘நந்தனம் ஜப்பானியக் காடை’ என இரண்டு ரகங்கள் உள்ளன (இவர் நாமக்கல் காடையை வளர்க்கிறார்). ஒரு நாள் காடைக் குஞ்சுகளைத்தான் வளர்ப்புக்காக வாங்கவேண்டும். தீவனம் எடுக்க ஆரம்பித்துவிட்ட குஞ்சுகளை வாங்கினால், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் கொண்டு செல்லும்போது இறப்பு விகிதம் அதிகமாகும். ஒரு நாள் குஞ்சுகளை புரூடரில் (5 அடி விட்டம், ஓரடி உயரத்துக்கு தகரத்தில் அமைக்கப்பட்ட அமைப்பு) விட்டு… அதன் மையத்தில், கங்கு நிரப்பிய பானையை வைத்து வெப்பமூட்ட வேண்டும். குஞ்சுகள் பானையை நோக்கி வந்தால்… நெருப்பை அப்படியே பராமரிக்கலாம். தகரத்தை நோக்கிச் சென்றால், சூடு அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, நெருப்பைக் குறைக்க வேண்டும்.
முதல் ஒரு வாரத்துக்கு கடைகளில் கிடைக்கும் குஞ்சுத் தீவனத்தைக் கொடுக்கலாம். 100 குஞ்சுகளுக்கு தினமும் 150 கிராம் முதல் 250 கிராம் வரை தீவனம் தேவைப்படும். தினமும் காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து ஒரு டப்பாவில் நிரப்பி, புரூடருக்குள் வைக்கவேண்டும். காடைக் குஞ்சு தண்ணீர் டப்பாவில் விழுந்து, இறக்க வாய்ப்புள்ளதால்… முதல் இரண்டு நாட்கள் வரை தண்ணீர் டப்பாவில் கோலி குண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும். அந்த வண்ணத்தைப் பார்த்து பயந்து, குஞ்சுகள் தண்ணீரில் இறங்காது.
நோய் வாராமல் தடுக்கும் பஞ்சகவ்யா!
ஒரு வார வயதுக்குப் பிறகு குஞ்சுகளை புரூடரிலிருந்து கூண்டுகளுக்கு மாற்றலாம். கறிக்காக வளர்க்கப்படும் குஞ்சுகள் என்றால், வளரும் பருவத்தில், 100 குஞ்சுகளுக்கு 2 கிலோ வரை தினமும் தீவனம் தேவைப்படும். முட்டைக்காக வளர்ப்பதென்றால், இதைவிட குறைவாகவே தீவனம் கொடுக்கலாம். காலை, மாலை இரண்டுவேளைகளிலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வீதம் பஞ்சகவ்யா கலந்து வைக்க வேண்டும். இப்படிப் பராமரித்தால், 28 நாட்களில் இருந்து 30 நாட் களில் ஒரு காடை, 200 முதல் 220 கிராம் எடை வந்துவிடும். இந்தசமயத்தில் விற்பனை செய்யலாம். பஞ்சகவ்யா கலந்த தண்ணீரைக் கொடுக்கும்போது காடைகளுக்கு நோய்த்தாக்குதல் குறைவதுடன், கறியும் சுவையாக இருக்கும்.
6 பெட்டைக்கு 3 ஆண்!
தாய்க்காடைகள், 50-ம் நாளுக்குமேல் முட்டை இட ஆரம்பிக்கும். அதன் பிறகு, ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம் இருக்கும் கூண்டில், 6 பெட்டைக்கு, 3 ஆண் காடை என்கிற கணக்கில், அடைத்து வைக்கவேண்டும். ஒரு கிலோ தீவனத்துக்கு
50 மில்லி பஞ்சகவ்யா என்கிற கணக்கில் கலந்து கொடுக்கவேண்டும். 100 காடைகளுக்கு தினமும் 2 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு வயதுக்குப் பிறகு முட்டையிடும் தன்மை குறைவதால், ஓர் ஆண்டுக்குப் பிறகு தாய்க்காடைகளைக் கழித்து வரவேண்டும். இந்தக் காடைகளுக்கு அடைகாக்கும் தன்மை கிடையாது. அதனால், இன்குபேட்டர் மூலம்தான் பொரிக்க வைக்க வேண்டும். இன்குபேட்டரில் 17 நாட்களில் முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரும்.’
மாதம் 80 ஆயிரம்!
வளர்ப்பு முறை பற்றி விளக்கிய ராஜேந்திரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார். ”350 பெட்டைகள் மூலமா நாளன்றுக்கு சராசரியா 250 முட்டைகள்னு ஒரு மாசத்துக்கு 7 ஆயிரத்து 500 முட்டைகள் கிடைக்குது. இதில் ஆயிரம் முட்டைகளை ஒரு முட்டை 2 ரூபாய் வீதம் விற்பனை செய்றதுல, 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
6 ஆயிரத்து 500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, சராசரியா 3 ஆயிரத்து 550 குஞ்சுகள் வரை கிடைக்கும். இதுல ஆயிரம் குஞ்சுகளை ஒரு நாள் குஞ்சுகளா விற்பனை செய்துடுவேன். ஒரு குஞ்சு 7 ரூபாய்னு விற்பனை செய்றதுல 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
மீதியிருக்கிற 2 ஆயிரத்து 550 குஞ்சுகளை 28 நாள் வரை வளர்த்து விற்பனை செய்றேன். இதை இறைச்சிக்காக வாங்குறாங்க. ஒரு காடை 28 ரூபாய்னு விற்பனை செய்றப்போ… 71 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கிது. ஆக மொத்தம், ஒரு மாசத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், பராமரிப்பு செலவு, மின்சாரக் கட்டணம்னு எல்லாச் செலவும்போக… மாசம் 30 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது” என்றார், மகிழ்ச்சியாக!
Image may contain: 1 person, smiling, outdoor

”குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

”குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு.
Image may contain: food and text

2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது.
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
”நாங்க இந்தளவுக்கு
வளந்திருக்கிறதுக்கு காரணமே ‘பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு ‘பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் ‘பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு” என ஸ்ரீப்ரியா பூரிக்க… அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.
”நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது… ‘பட்டன் காளான்’, ‘சிப்பிக்காளான்’, ‘பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்” என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
‘சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் ‘பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து… வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ”ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்” என்ற ராஜ்குமார்,
இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

Image may contain: 2 people, people smiling, people sitting and people standing

தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் செய்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை சரி செய்யலாம்

என்கிற புதிய முறையை கண்டுபிடித்துள்ள சுப்பிரமணி, பயிர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை விட வேண்டிய நீரை 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே பாய்ச்சி, வெற்றிகரமாக விவசாயம் செய்கிறார். இம்முறையைப் பின்பற்றுவதால், சுப்பிரமணிக்கு நல்ல No automatic alt text available.விளைச்சலும் நீர் சேமிப்பும் ஏற்படுவதைப் பார்த்த மற்ற பகுதி விவசாயிகளும் தேங்காய் நார்க்கழிவு விவசாயத்துக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு 3 ஏக்கர் நிலமும், 120 தென்னை மரங்களும் இருக்கின்றன.
விவசாயத்துடன் தேங்காயை நார்ல இருந்து கயிறு திரிக்கும் தொழிலையும் செய்கிறேன். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் பவானி சாகர் அணையிலிருந்து திறந்து விடும் நீரையே நம்பி உள்ளோம். இதனால், பல நேரங்களில் போதுமான நீர் இல்லாமல் பயிர்கள் கருகிப் போய்விடுகின்றன.
விவசாயம் இப்படி இருந்தாலும் தேங்காய் நார் பிரிக்கும் தொழிலை விடாமல் செய்தேன். ஒவ்வொரு முறையும் நார்ல இருந்து கயிறு திரிக்கும்போது, கிடைக்கும் கழிவுகள் அப்படியே மக்கிவிடும்.
ஒருமுறை 2 நாட்கள் விடாது மழை பெய்தபோது, வெளியில் இருந்த தேங்காய் நார்க்கழிவுகள் நனைந்து, 3 வாரம் வரைக்கும் காயாமல் ஈரமாவே இருந்தன. இதைப் பார்த்தபோதுதான் வறண்டு போன வயல்ல, இதைப் போட்டு ஏன் விவசாயம் பண்ணக் கூடாது என்று தோன்றியது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு நிலத்தை உழுறதுக்குமுன் ஒரு டன் தேங்காய் நார்க் கழிவுகளை நிலம் முழுக்கத் தூவி, நல்லா உழுது நடவு நட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே தண்ணீர் அதிகம் தேவைப்படவில்லை. தினமும் தண்ணீர் பாய்ச்சும் வயலுக்கு தேங்காய் நார்க்கழிவைப் போட்டதிலிருந்து 2 வாரத்துக்கு ஒருமுறைதான் நீர் விடுறேன்.
பயிருக்கு அடியில நார்க்கழிவு திரி திரியாக இருக்கிறதால, வயல் முழுக்க எந்நேரமும் ஈரப்பதமாவே இருக்கும். இதில் உரச்செலவு குறைவதோடு தேங்காய் நார்க்கழிவு மக்கிப்போன கழிவு என்பதால், அதுவே மண்ணுக்கு வளம் கொடுத்து சிறந்த இயற்கை உரமாகவும் உள்ளது.
ஆரம்பத்துல நார்க்கழிவு மூலமாக விவசாயம் செய்வதைப் பார்த்துட்டு, பயிர் வீணாகிடப் போகுதுன்னு அறிவுரை சொன்னவங்க எல்லாம், நான் ரெண்டு போகத்துலயும் மகசூல் அதிகமா எடுத்து தண்ணீரை சிக்கனம் பண்ணதால, இப்போ என்னைத் தேடி வந்து தேங்காய் நார்க்கழிவு விவசாய முறையை தெரிஞ்சிக்கிட்டுப் போய் விவசாயம் பண்ணுறாங்க என்பதை நினைக்கும்போது, ரொம்ப பெருமையா இருக்கு” என்று சாதித்து விட்ட மகிழ்ச்சியில் பேசினார் சுப்பிரமணி.
தேங்காய் நார்க்கழிவு முறையில் விவசாயம் செய்வது பற்றி சுப்பிரமணி தரும் டிப்ஸ்:
தேங்காயை உரித்து அதன் நாரை அப்படியே நிலத்தில் போட்டால், பயிர்கள் பாழாகிவிடும். அதனால், தேங்காயிலிருந்து மெஷின் மூலம் நாரை தனியாகப் பிரித்து, அதன்மூலம் வரும் நார்க்கழிவுகளை மக்க வைத்த பிறகே வயலில் போட்டு உழ வேண்டும்.
அனைத்துப் பயிர் சாகுபடிக்குமே இந்த முறையைக் கையாளலாம்.
வட மாவட்டங்களில் தேங்காய் சாகுபடி மிகக் குறைவு என்பதோடு, நார்த் தயாரிப்பு முறைகளும் குறைவு. தமிழகத்தில் கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் நார் தயாரிப்பது அதிகம் என்பதால், மற்ற பகுதி விவசாயிகள் நார்க்கழிவுகளை இந்தப் பகுதிகளில் வாங்கிக்கொள்ளலாம்.
நார்க்கழிவை எடுத்து வந்து, காளான் விதையைக் தூவினால் சீக்கிரம் மக்கிவிடும்.
ஒரு ஏக்கருக்கு அரை அல்லது ஒரு டன் தேங்காய் நார்க்கழிவுகளைப் போடலாம்.
தண்ணீர்ப் பிரச்சினையை சந்தித்து வரும் விவசாயிகள், இம்முறையைப் பின்பற்றினால் நல்ல விளைச்சல் பெறுவதோடு நீர் சிக்கனமும் செய்யலாம்.
கேரளாவில் தென்னை அதிகம் என்பதால், தேங்காய் நார் பிரிப்பதற்கு அங்கு வாரியமே உள்ளது. பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அதனுடைய கிளையிலும் நார்க்கழிவுகள் தேவைப்படும் விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம். ஒரு டன் நார்க்கழிவு 1,000 முதல் 2,000 ருபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.
இந்த முறையைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்தால், மேலும் நல்ல விளைச்சல் கொடுக்கும்
சுப்பிரமணி போன் நம்பர் – 90959 99535
Image may contain: outdoor and nature

வீட்டுக்கு ஒரு எருமை மாடும், முருங்கை மரமும் இருந்தால்... மோசமான வறட்சியையும் சமாளிக்கலாம்’ Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

வீட்டுக்கு ஒரு எருமை மாடும், முருங்கை மரமும் இருந்தால்... மோசமான வறட்சியையும் சமாளிக்கலாம்’ என்பது முன்னோர் வாக்கு.

கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!
சரியான பராமரிப்பு... நிறைவான லாபம்...
காலப்போக்கில் மேய்ச்சல் நிலங்களின் அழிவும், தீவனங்களின் விலையேற்றமும் கால்நடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகச் செய்து கொண்டிருப்பதுதான் சோImage may contain: horse, outdoor and natureகம்!
இத்தகையச் சூழலிலும் கால்நடை வளர்ப்பை விடாமல் செய்து வரும்
விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அவர்களில் ஒருவர்!
கம்பெனி தீவனத்தில் லாபமில்லை!
பால் கறவையை மேற்கொண்டிருந்த வேளையில்தான் செல்வராஜை சந்தித்தோம். கை வேலையை முடித்துவிட்டு நம்மிடம் வந்தவர், ''எங்கிட்ட நாலரை ஏக்கர் நிலமிருக்கு. அதுல, 20 சென்ட்ல வீடு, கொட்டகை, சாலை இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல மாடுகளுக்கான பசுந்தீவனம்; 35 சென்ட் நிலத்துல மல்லாட்ட (நிலக்கடலை); 15 சென்ட்ல காய்கறி; 50 சென்ட்ல சம்பங்கி; 1 ஏக்கர் 80 சென்ட்ல நெல்லு எல்லாமும் இருக்கு.
எல்லா விவசாயக் குடும்பத்துலயும் சொல்ற மாதிரிதான் எங்க வீட்டுலயும், 'படிச்சிட்டு வேலைக்குப் போ'னு சொன்னாங்க. அதனால, ஐ.டி.ஐ. முடிச்சுட்டு, லாரிக்கு பாடி கட்டுற கம்பெனிக்கு வேலைக்கு போனேன். அது எனக்கு சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு, நகைகளை அடகு வெச்சு 16 மாட்டை வாங்கி, பால் பண்ணையை ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்துல கம்பெனி தீவனம்தான் வாங்கிப் போட்டேன். ரெண்டு வருஷம் கழிச்சு, கணக்கு பார்த்தப்ப... வரவுக்கும், செலவுக்கும் சரியா இருந்துச்சு. லாபமில்லாத தொழிலை எதுக்குக் கஷ்டப்பட்டு செய்யணும்னு, வீட்டுத்தேவைக்காக ரெண்டு மாட்டை மட்டும் வெச்சுகிட்டு, மிச்சத்தை வித்துட்டு, விவசாயத்துல இறங்கினேன்.
பலவித பசுந்தீவனம்!
ஆரம்பத்துல ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சேன். அதுல, தார்பாய் தைக்கறதுக்கு உரச்சாக்கு மட்டும்தான் மிச்சமாச்சு. லாபம் ஒண்ணுமில்லை. அப்பறம்தான், நிறைய கருத்தரங்கம், பயிற்சிகள்னு போக ஆரம்பிச்சு, நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
குறிப்பா, கால்நடைகளைத் தாக்குற நோய்களுக்கு மூலிகை வைத்திய முறைகள்; கறவை மாடுகளுக்கான அடர் தீவனங்கள் பத்தின விஷயங்களை நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், கோ-1, கோ-3, கோ-4, கினியாபுல், வேலி மசால், மல்பெரி...னு பல வகையான பசுந்தீவனங்களை வளக்க ஆரம்பிச்சேன். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன். இப்போ என்கிட்ட 10 கறவை மாடுகள் இருக்கு.
நானே சொந்தமா தீவனம் தயாரிச்சுக்கறதால... இப்ப கறவை மாடு வளர்ப்பு லாபகரமா இருக்கு'' என்ற செல்வராஜ்,
10 மாடு... மாதம் 32 ஆயிரம்!
''10 மாடுகள், கொட்டகைக்குனு மொத்தமா மூணரை லட்ச ரூபாய் செலவாச்சு. தினமும் சராசரியா 80 லிட்டர் பால் கிடைக்குது. லிட்டர் 20 ரூபாய்னு விக்குறேன். இதன் மூலமா, தினமும் 1,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனத்துக்கான செலவு 500 ரூபாய் போக 1,100 ரூபாய் லாபம். எப்படியும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன்.
மாட்டுச்சாணத்துல 'பயோ-கேஸ்’ எடுக்குறேன். அது, எங்க குடும்பத்துல நாலு பேருக்கு போதுமானதா இருக்கு. பயோ கேஸ் பிளாண்ட் கழிவுகளை, மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்துறேன். தினம் 45 கிலோ அளவுக்கு மண்புழு உரம் உற்பத்தியாகுது. இதை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கிறேன்’ என்று சொன்னதோடு...
மாடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கை வைத்தியம் ஆகியவற்றையும் பகிர்ந்தார். அவற்றை பாடமாக கீழே தொகுத்திருக்கிறோம்.
பருவம் வரவைக்கும் கற்றாழை!
'கண்ணில் தண்ணீர் வடிகிற மாடு; தள்ளாடுகிற மாடு; காதுக்கு அருகில், தண்டு வடத்தை ஒட்டி ரோமம் பெரிதாக இருக்கிற மாடுகளை வாங்கக் கூடாது. வால் பெரிதாக, பால் நரம்புகள் நன்றாகத் தெரியும் மாடுகளை வாங்கலாம். மாட்டை வாங்கி வந்ததும், முதலில் அகத்திக்கீரையைக் கொடுக்க வேண்டும். அது மாட்டின் சூட்டைத் தணிக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு மாட்டைத் தனியாக கட்டி வைத்து, ஏதாவது நோய் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் மற்ற மாடுகளோடு சேர்க்க வேண்டும்.
பெரிய மாடாக வாங்காமல், கன்றாக வாங்கி வந்தால், விலை குறைவாக இருக்கும். ஒன்றரை வயதில் இருந்து ரெண்டு வயதுக்குள் மாடுகள் பருவத்துக்கு வந்துவிடும். அதைக் கடந்த பிறகும் பருவத்துக்கு வரவில்லை என்றால், ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை முள் இல்லாமல் சீவி, மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து சாப்பிடக் கொடுத்தால் சீக்கிரம் பருவத்துக்கு வந்து விடும்.
மடி நோயை விரட்டும் சாக்பீஸ்!
R'மாட்டின் கொம்பு உடைந்தால், ஒட்டடை (சிலந்தி வலை) -50 கிராம், சுண்ணாம்பு-10 கிராம், வெல்லம்-25 கிராம் ஆகிவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, கட்டுத்துணி வைத்து கட்டிவிட வேண்டும். சரியான பிறகு கட்டுத்துணியைப் பிரித்து விடலாம். மடிநோய் தாக்கிய காம்பு, கோழிக்குண்டு மாதிரி வீங்கி இருக்கும்.
காம்பை ஐந்தாறு தடவை வெறும் தண்ணீரை அடித்து நன்றாகக் கழுவி விட்டு... இரண்டு 'சாக்பீஸை’ எலுமிச்சைப் பழச்சாற்றில் குழைத்துத் தடவினால் சரியாகி விடும். அப்படியும் சரியாகாத பட்சத்தில்... அமுக்காரா கிழங்கு-50 கிராம், சுக்கு-10 கிராம் ஆகியவற்றைப் பொடித்து, சுடுதண்ணீரில் கலந்து காம்பில் பூச வேண்டும்.
கோமாரி நோய் தென்பட்டால், தினம் ஒன்று வீதம் மூன்று நாட்களுக்கு நாட்டுக்கோழி முட்டையை உள்ளுக்குக் கொடுப்பதோடு... எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் மேல் புள்ளி வைத்துவிட வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிறை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணையில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நான்கு நாட்களுக்குக் கொடுத்தால் கோமாரி சரியாகி விடும்.
சாணத்துடன் மஞ்சள்தூள் கலந்து கட்டுத்தரையை மெழுகிவிட வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றினைப் பால் குடிக்க விடக்கூடாது. அப்படிப்பட்ட கன்றுக்கு, 200 மில்லி, ஒரு கரண்டி விளக்கெண்ணெய், ஒரு நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து... புட்டிப்பாலாகக் கொடுக்கலாம்.
உப்புசம் வந்த மாடுகளுக்கு 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராக சுண்ட வைத்துக் கொடுத்தால் சரியாகிவிடும். கால் புண், அடிபட்ட புண் ஆகியவற்றுக்கு வேப்பெண்ணெயைத் தடவி விட்டாலே சரியாகிவிடும்’
நிறைவாகப் பேசிய செல்வராஜ், ''ஆரம்பத்துல 16 மாடுகளை வெச்சுருந்தும் என்னால இந்தளவுக்கு சம்பாதிக்க முடியலை. இப்போ 10 மாடுகளை வெச்சே... நல்லா சம்பாதிக்கிறேன். அதுக்குக் காரணம் கை வைத்தியம், தீவன முறைனு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து நான் செய்றதுதான். மாடு வளர்க்கற ஒவ்வொருத்தருமே இதையெல்லாம் சரிவர கடைபிடிச்சா... கறவை மாடுகள் மூலமா எல்லாருமே லாபத்தை அள்ள முடியும்'’ என்று நம்பிக்கையூட்டினார்!
தொடர்புக்கு, செல்வராஜ், செல்போன்: 95669-07377.
அடர் தீவனம் அவசியம்!
அரிசி நொய்-50%, கேழ்வரகு-25%, மக்காச்சோளம்-25% ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 3 கிலோ எடுத்து கஞ்சியாக காய்ச்சி, 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த மூன்று கிலோ கடலைப் பிண்ணாக்குடன் கலந்து, மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். இது 10 மாடுகளுக்கு போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ தவிட்டைக் கலந்து கொடுக்க வேண்டும். மதியவேளையில், ஒவ்வொரு மாட்டுக்கும் பலவிதமான புல் வகைகள் கலந்த 15 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாட்டுக்கும் இரவில், 3 கிலோ உலர் தீவனம் கொடுக்க வேண்டும். காலையில் இளம்வெயிலில் இரண்டு மணி நேரம் மாடுகளை நிறுத்தி வைத்து, வாரம் ஒரு முறை குளிப்பாட்டி விடவேண்டும்.

கோழிகளுக்கு தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

🐓🐓🐓 கோழிகளுக்கு தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்)
தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்



No automatic alt text available.

1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ

7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும்.
மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாகஉட்
செலுத்தவேண்டும்.
கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து
கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட
குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான
பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/
சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்றநார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர்தெளித்து வீட்டிற்கு
வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை
கவிழ்த்து வைத்தால்மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான
கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள்உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15
குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின்அளவு இடத்திற்கு
இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை
என்றால் ஒன்றுக்கு மேல்எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து
வைக்கலாம்.
No automatic alt text available.

65 நாளில் 22 ஆயிரம்! ஏக்கருக்கு 650 கிலோ... மானாவாரியில் மகிழவைத்த ஜீரோ பட்ஜெட் உளுந்து..! Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

65 நாளில் 22 ஆயிரம்! ஏக்கருக்கு 650 கிலோ... மானாவாரியில் மகிழவைத்த ஜீரோ பட்ஜெட் உளுந்து..!

''இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். ஆனா, எனக்கு ஏக்கImage may contain: one or more people, plant and outdoorருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஜீரோ பட்ஜெட் விவசாயம்கிறதால பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம திரட்சியா விளைஞ்சுருக்கு'' என சக நண்பர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், சுப்ரமணியன்.

இச்செய்தி நமக்கும் எட்டவே, கோவிந்தபுரம் தேடிச் சென்று, தோட்டத்தில் உளுந்து புடைத்துக் கொண்டிருந்த சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
''15 வயசுலேயே விவசாயத்துல இறங்கிட்டேன். இது செம்மண்ணும் லேசா களியும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல நெல்லும், 4 ஏக்கர்ல தென்னையும் சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கோம். இந்த ஒரு ஏக்கர் மட்டும் மேட்டு நிலமா தனியா இருக்கு. அஞ்சாறு வருசத்துக்கு முன்னவரைக்கும் இந்த நிலத்துல வாழை சாகுபடி செஞ்சோம். அப்போ, வீரசோழன் ஆத்துல இருந்து வாய்க்கால் தண்ணி கிடைச்சது. இப்போ, இந்த நிலம் வரைக்கும் தண்ணி வர்றதில்லை. இந்த நிலத்துல போர்வெல்லும் கிடையாது. அதனால, நிலத்தைத் தரிசா போட்டுட்டோம்.
இடையில, 'பசுமை விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு. சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பங்கள் அத்தனையும் ரொம்ப விரிவா, எளிமையா அதுல வந்துச்சு. அதையெல்லாம் படிச்சு தெரிஞ்சுட்டு... அஞ்சு வருஷமா, இந்த ஒரு ஏக்கர்ல மட்டும் ஜீரோ பட்ஜெட் முறையில மானாவாரியா உளுந்து சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
படிப்படியாக அதிகரித்த மகசூல்!
''முதல் வருஷம் ஏக்கருக்கு 15 டன் மாட்டு எரு போட்டு, விதையைத் தெளிச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு கொடுத்தேன். அந்த வருஷம் ஏக்கருக்கு 200 கிலோ மகசூல் கிடைச்சுது. அடுத்த ரெண்டு வருசமும், அடியுரம் எதுவும் போடல. மத்த இடுபொருட்கள் எல்லாம் கொடுத்தேன்.
400 கிலோ அளவுக்குக் கிடைச்சுது. போன வருஷமும் அதேமாதிரிதான் செஞ்சேன். கொஞ்சம்கூட, மழையே இல்லாம, வறட்சி கடுமையா இருந்ததால, பயிர் கருகிப் போச்சு. இந்த வருஷம் புழுதி உழவு ஓட்டிட்டு, கண்டிப்பா மழை வரும்ங்கற எதிர்பார்ப்போட பசுந்தாள் உரத்தை விதைச்சு மடக்கி உழுது, உளுந்து விதைச்சேன். ரெண்டு, மூணு மழை கிடைக்கவும் நல்ல விளைச்சல் கிடைச்சுருக்கு'' என்ற சுப்ரமணியன், தனது சாகுபடி முறையைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
இயற்கை முறை எலி கட்டுப்பாடு!
'ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில், ஐந்து சால் புழுதி உழவு ஓட்டி, மழை கிடைக்கும் நாட்களில், ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதையைத் தெளிக்க வேண்டும். 10 மற்றும் 25-ம் நாட்களில் 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். சணப்பில் 45-ம் நாளுக்குப் பிறகு பூ எடுத்ததும், மடக்கி உழுது... நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, 10 கிலோ ஆடுதுறை-3 ரக விதை உளுந்தைத் தெளிக்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் எலிகளைச் சாப்பிடக்கூடிய பறவைகள் வந்து அமர்வதற்காக... தலா 12 அடி இடைவெளியில், 5 அடி உயரமுள்ள குச்சிகளை ஊன்றி, அதன் மேல் பகுதியில் கவட்டை (ஆங்கில 'வி' வடிவம்) போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இதுபோல் அமைத்தால் பகல் நேரங்களில் பறவைகள் வந்தமர்ந்து, பூச்சிகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடும். இரவு நேரங்களில் கோட்டான்கள் வந்தமர்ந்து, பொந்துகளில் உள்ள எலிகளைப் பிடித்துச் சாப்பிடும்.
65 நாளில் 22 ஆயிரம்!
உளுந்து விதைத்த 4-ம் நாள், 100 கிலோ கன ஜீவாமிர்தத்தை நிலம் முழுக்கத் தூவவேண்டும். 10-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்துத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45-ம் நாள், பூ பூக்கும் தருவாயில் 4 லிட்டர் தேமோர் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். இந்த தேமோர் கரைசல், வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு, அதிகளவில் பூ பூத்து, நன்றாகக் காய் பிடிப்பதற்கு உதவும். 52-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும் ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 65-ம் நாள் நன்றாக முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.’
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''மேற்கண்ட முறையில நான் சாகுபடி செஞ்சதுல, ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் விலை கிடைக்குது. அந்தக் கணக்குல ஏக்கருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம். அதுல, 10 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 22 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும். மானாவாரியில, அதுவும் 65 நாள்ல இப்படியொரு லாபம்கிறது... சந்தோஷமான சமாச்சாரம்தானே'' என்றார் சிரித்தபடியே!

Image may contain: plant, nature and outdoor

பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை! Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை!

வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிImage may contain: plant, outdoor and natureக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர்
தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. முருங்கையையும் வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும்.
‘குழி’ தொழில்நுட்பம் :
வழக்கமான முருங்கை சாகுபடியில் ஒன்றரை அடிக்கு குழி எடுத்து, அதில் செடியை நடவு செய்வார்கள். இப்படி செய்யும் போது அடிக்கடி பாசனம் செய்வது அவசியமாகிறது. காரணம் நாம் கொடுக்கும் பாசன நீர் மட்டும் தான் ஆதாரம். பெய்யும் மழை நீர், அந்த இடத்தை நனைத்து விட்டு வழிந்தோடி விடும். இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும். இதற்கு நாம் செடியை நடவு செய்ய குழி எடுக்கும் போது ஆழமாக எடுத்தால் போதும். அதாவது, 5 அடி ஆழம், 4 அடி நீளம், அகலத்தில் குழி எடுக்க வேண்டும். முருங்கை கன்றுக்கு இத்தனை ஆழமான குழிகளா எனத் தோன்றும். ஆனால், இந்த குழிகள் தான் வறட்சியில் இருந்து முருங்கையை காக்கும் கவசம். இப்படி எடுக்கும்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக 80 முதல் 100 குழிகள் வரை எடுக்கலாம்.
ஆழகுழி நடவு :
4 அடி நீள, அகலத்தில் அளந்துக்கொண்டு குழியெடுக்க வேண்டும். முதல் மூன்று அடி ஆழம் வரை எடுக்கும் மண்ணை குழியின் மேல் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு அடி ஆழத்தில் எடுக்கும் மண்ணை குழியின் கீழ் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழியின் ஆழம் 5 அடி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, நாம் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள மேல்மண்ணை குழியில் கொட்டி நிரப்ப வேண்டும். அதற்கு மேல், தொழுவுரம், சாம்பல் கலந்த கலவையை ஒவ்வொரு குழியிலும் ஒரு அடி உயரத்திற்கு கொட்ட வேண்டும். அதற்கு மேல் கீழ் பக்கமாக எடுத்து வைத்துள்ள மண்ணை ஒரு அடி அளவுக்கு குழிக்குள் தள்ள வேண்டும். இப்போது, குழியில் தண்ணீர் விட வேண்டும். மேலுள்ள மண், அரையடி ஆழத்திற்கு இறங்கும். ஒரு நாள் இடைவெளி விட்டு, நான்கு அடி குழியில், ஒரு முனையில் இருந்து அரையடி தள்ளி, கையால் குழியெடுத்து, முருங்கை செடிகளை நடவு செய்ய வேண்டும். அதே குழியின் மறுமுனையில் இருந்தும் அரை அடி இடைவெளி விட்டு, மற்றொரு செடியை நடவேண்டும். ஆக, ஒரு குழியில் இரண்டு செடிகளை நடவேண்டும். இரண்டு செடிகளுக்கான இடைவெளி மூன்று அடி இருக்க வேண்டும். நடவு வயலைச் சுற்றி, 15 அடி இடைவெளியிலும், வயலுக்குள் 30 அடி இடைவெளியிலும் இதே முறையில் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியின் அருகேயும் உள்ள கீழ்மண்ணை நீளமாக கரையாக அமைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பெய்யும் மழைநீர் அந்தந்த பகுதியிலேயே தடுக்கப்படும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், இரண்டாவது மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறையும், மூன்றாவது மாதத்தில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதுமானது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளவர்கள், இரண்டு ஆண்டுகள் கழித்து மாதம் ஒருமுறை பாசனம் செய்தால் கூடப் போதும். வாய்க்கால் பாசனத்தை விட, சொட்டுநீர் பாசனம் அமைத்தால் குறைந்த நீர்வசதி உள்ளவர்கள் கூட முருங்கை பயிரிடலாம்.
ஒவ்வொரு குழியும் ஒரு ஒட்டகம்!
குழித் தொழில்நுட்பம் பற்றி பேசும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முன்னோடி முருங்கை விவசாயி அழகர்சாமி, ‘‘முருங்கை மரம் அதிக பலமில்லாத மரம். வேகமா காத்தடிச்சா கீழே சாய்ஞ்சிடும். அதேப் போல வறட்சியைத் தாங்கி வளர்ற பயிர்னாலும், கடும் வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாம மரம் காஞ்சிப்போயிடும். அதுக்குக் காரணம், நாம அதிக ஆழம் இல்லாம மேலாக குழி எடுத்து நடுறதுதான். அஞ்சு அடி ஆழத்துக்கு குழி எடுத்து நடும்போது, வளமான மேல் மண் கீழே போயிடுது. செடிக்கு தேவையான சத்து சாம்பல், எரு கலவையில கிடைச்சிடுது. அஞ்சு அழி குழியும் மண்ணு பொலபொலப்பா இருக்கும். அதுனால, இந்த குழியில நடுற செடியோட வேர் அஞ்சு அடி ஆழம் வரைக்கும் வேகமாப் போகும். செடியும் செழிப்பா வளரும். அஞ்சி அடிக்கு மேல மண்ணு கடினமா இருக்கும். அதுல போய் வேர் முட்டி, உடைஞ்சு பல கிளைகளாகப் பிரியும். ஒரு குழியில ரெண்டு செடிகளை நடும்போது, ரெண்டு வேரும் இப்படி பல கிளைகளாப் பிரிஞ்சு ஒண்ணோடு ஒண்ணு பின்னிக்கும். அதுனால எவ்வளவு காத்தடிச்சாலும் மரம் சாயாது. பொதுவா முருங்கையை நெருக்கமா வைக்கும்போது, காத்து உள்ள நுழைஞ்சு வெளியப் போக வழியில்லாம கிளைகள்ல மோதி மரம் சாயும். ஆனால், முப்பது அடி இடைவெளியில முருங்கையை நடும்போது, காத்து உள்ள நுழைஞ்சு, சுலபமா வெளியப் போயிடும். அதுனால இந்த முறையில நடுறவங்க காத்தைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அடுத்தது, பாசனம். இந்த அஞ்சு அடி குழி ஒவ்வொன்னும் ஒரு ஒட்டகம் மாதிரி..மழை பெய்யும்போது அந்த இடத்துல விழுகுற அவ்வளவு தண்ணியையும் பிடிச்சு வெச்சுக்கும். அதுனால மரத்தோட வேர் பகுதி எப்பவும் ஈரப்பதமாகவே இருக்கும். அதனால, ரெண்டு மூணு மாசம் பாசனமே இல்லன்னாலும் மரம் செழிப்பா இருக்கும். மூணு மாசத்துக்குள்ள எப்படியும் ஒரு மழை கிடைச்சிடும். அதுனால இடையக்கோட்டை, பள்ளப்பட்டி மாதிரியான ஒரு சில இடங்கள்ல இந்த முறையில முருங்கையை மானாவாரியாகவே சாகுபடி செய்றாங்க. இப்படி செய்யும் போது ரசாயனத்துக்கு வேலையே இல்லை. ஆறு மாசத்துக்கு ஒருதடவை சாம்பலையும், எருவையும் கலந்து கொடுத்தாப் போதும். காய் வர்ற நேரத்துல, பஞ்சகவ்யா தெளிச்சா, காய் நல்லா பெருசா வரும். இதனால மகசூலும் அதிகரிக்கும்.
வருமானம் எப்போது வரும்?
முருங்கையை நடவு செய்த 6-ம் மாதத்தில் இருந்து மகசூலுக்கு வரும். தொடக்கத்தில் 10 கிலோ, 20 கிலோ எனத் தொடங்கும் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 கிலோ மகசூலாகக் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 80 குழிகள் இருந்தாலும், குழிக்கு இரண்டு மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கும். சராசரியாக 150 மரங்கள் என வைத்துக்கொண்டாலும் 30 ஆயிரம் கிலோ (50 டன்) காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலைக்கிடைக்கும். சராசரியாக கிலோ 20 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், 30 டன் காய்க்கு 6 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்‘‘ என்றார்.

ஆட்டு பண்ணைகளின் லாபம் Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

ஆட்டு பண்ணைகளின் லாபம்
No automatic alt text available.
என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது.
தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலி கிடாக்களும் மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, நல்ல பொலிகிடாக்கள் நல்ல குட்டிகள் உருவாவதில் 80 முதல் 90 சதவிகிதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நல்ல பொலி கிடாக்களை தேர்வு செய்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.
பொலி கிடாக்கள் தேர்வு

விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதே போல் தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும். ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம். இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.
இனப்பெருக்க கிடாக்கள் பராமரிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட கிடாக்குட்டிகளுக்கு மேய்ச்சலுடன் தனியாக 100 கிராம் அளவு அடர்தீவனம் மற்றும் சுத்தமான தண்ணீர் தர வேண்டும். இனப்பெருக்கத்திற்கு விடும் முன்னால் கிடாக்களின் இனப்பெருக்க உறுப்பை சுற்றி உள்ள உரோமத்தை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். காலின் குளம்பை சீராக வெட்டி விட வேண்டும். கிடாக்களை தனியாக கட்டி போடாமல் சுதந்திரமாக அதன் கொட்டகையில் உலாவ விட வேண்டும். கிடாக்களுக்கு மற்ற ஆடுகளுக்கு போடுகின்ற தடுப்பூசிகளையும், குறிப்பாக துள்ளுமாரி, கோமாரி நோய்களுக்கான தடுப்பூசிகளையும், குடற்புழு நீக்கமும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு விடும் பெட்டை ஆட்டின் இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் சாணம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஒரு கிடாவையும், ஒரு பெட்டை ஆட்டையும் விட்டு மூன்று முறை இனச்சேர்க்கை நடந்த பின் கிடாவையும், பெட்டை ஆட்டையும் பிரித்து விட வேண்டும். காலையில் வெயில் வரும் முன்பு இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு பிறகு கிடாக்களை உடனே மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
பொதுவாக, பொலி கிடாக்களை ஒன்று முதல் 6 வயது வரை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து ஒரே கிடாவை பயன்படுத்தினால் சில மரபியல் தொடர்பான நோய்கள் வரக்கூடும். எனவே, ஒரு கிடாவை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு அவற்றை பண்ணையில் இருந்து நீக்கி விடலாம். தரமுள்ள பொலி கிடாக்களும், பெட்டைகளும் உள்ள பண்ணைகளில் மிகச்சிறந்த ஆட்டு குட்டிகளை விவசாயிகள் தொடர்ந்து பெற முடியும்.
டாக்டர்.ரா.உமாராணி, கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மதுரை.
No automatic alt text available.

அசோலா வளர்ப்பு.... Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

அசோலா வளர்ப்பு....

இந்த உலகத்தில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சார்ந்த அசோலாவும் ஒன்று. பார்ப்பதற்கு கம்மல் போல இருப்பதால் 'கம்மல் பாசி' என்றும் சொல்கிறார்கள். இதில், வாழும் ‘அனபீனா அசோலா’ என்ற பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகிக்கின்றன. இதில் சுமார் 26% தழைச்சத்து உள்ளது.
ஒரு பாத்திரம் அல்லது தொட்டியில் 7-10 Image may contain: plant and outdoorசெ.மீ. உயரத்துக்கு
தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களை பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரிய ஒளி படும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்கவேண்டும். தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா விதைகள் ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கி விடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்துமடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால் சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டியில் போட்டால் போதும்... பெருக ஆரம்பித்து விடும்.
Image may contain: plant and outdoor
இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்துவிடவும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்தான் இந்த அசோலா. இதை பால் மாடுகளுக்குக் கொடுத்தால் அதிக பட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% தீவனச் செலவு குறையும். கோழி களுக்கு கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்கு போட்டால் விரைவாக வளரும். புரதச் சத்து மிகுந்த இந்த பாசியில் வடை, போண்டா செய்து நாம் சாப்பிடலாம்.
கொசுறு தகவல்: அசோலா வளர்க்கப் படும் இடங்களை கொசுக்கள் எட்டிக்கூட பார்க்காது.
Image may contain: grass and outdoor

‘நாமே தயாரிக்கலாம், அடர்தீவனம்!’ Ganesh integrated farm attur (Agriculture news Tamil)



‘நாமே தயாரிக்கலாம், அடர்தீவனம்!’ “நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்த்தாலும்... அடர்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தா சீக்கிரம் நல்ல எடை வரும். அடர்தீவனங்களுக்காக வெளியில் அலைய வேண்டியதில்லை நாமே குறைஞ்ச செலவில் தயார் செய்துக்கலாம்” அடர்தீவனங்கள் தயாரிப்பு முறை குறித்த தகவல்கள் இதோ...
No automatic alt text available.

நல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு! Ganesh integrated farm attur (Agriculture news Tamil)

நல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு!

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.
“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்Image may contain: one or more people and outdoorடையிடும் பருவத்திலிருக்கும் கோழி) வாங்கி
வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை.

கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.
நன்றி விகடன்



குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! Ganesh Integrated Farm Attur (Agriculture News Tamil)

குடம்புளியில் சமையல்!!!-பழைய வாழ்க்கை திரும்புகிறது!!! குடம்புளி என்பது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ...